" தலைவரே! ஒரே ஒரு நிமிஷம்! ஏதோ எங்கள் பிரச்னை இந்த பத்து ஓனர் களை மட்டும்தான் பாதிக்கும் என்று நினைப்பது தவறு, இருபது ஓனர்களையும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் பாதிக்கும். ஏனெனில், இருபது பிளாட்டுகளும் காலி செய்தால்தான், மனையை விற்கமுடியும். இருபது பேரும் கோடீஸ்வரன்கள் ஆகலாம். இல்லையென்றால், ஒருவர் கூட ஆகமுடியாது. ஆகவே, எல்லா ஓனர்களும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுங்கள். அதற்கு சௌகரியமாக, நாங்கள் இங்கிருந்து சென்று விடுகிறோம். நீங்கள் அழைக் கும் போது, வருகிறோம். அவசரம் ஏதுமில்லை. நாளை கூட மீண்டும் கூடலாம்."
" நீங்கள் சொல்வது சரிதான்! ஐந்து நிமிஷத்தில் ஓனர்கள் நாங்கள் கலந்து பேசிவிட்டு பதில் சொல்கிறோம்! நீங்கள் இங்கே இருங்கள்......"
நிரஞ்சனுடன் மற்ற ஓனர்களும் மேல்தள திறந்த வெளிக்கு சென்றனர்.
" சொல்லுங்க! என்ன செய்யலாம்?"
" பேசியவர் வக்கீல் இல்லையா? சாதுர்யமாக பேசினார். பரவாயில்லை. நாங்களும் நியாயமாகவே நடந்துகொள்வோம்...."
" சரி, உங்களில் ஒருவர் பேசுங்கள்! வாங்க, போகலாம், கீழே!"
கீழே வந்து மறுபடியும் கூடியதும், பத்து ஓனர்களின் சார்பாக, ஒருவர் பேசினார்.
" நாங்கள் ஏற்கெனவே அவரவர் பிளாட்டில் வசிக்கிற குடித்தனக்காரனிடம் பேசி இருக்கிறோம். அதன்படி, அவர்கள் பிளாட்டை இந்த மாதமே காலி செய்து தர வேண்டும். அதற்கு ஈடாக, அவர்கள் புதிதாக குடிபோகும் இடத்தின் ஆறுமாத வாடகை முன்பணத்தை நாங்கள் தர முன் வருகிறோம். தவிர, ஏற்கெனவே தந்துள்ள முன் பணத்தையும் உடனடியாக தருகிறோம். அதிகபட்சமாக நாங்கள் உதவக்கூடியது, இதுதான். இதற்கு ஒப்புக் கொண்டு உடனடியாக காலி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்......"
" மன்னிக்கவும்! நியாயம் இருசாராருக்கும் பொது! ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும்!
ஓனர்களுக்கு, தலைவர் மனை வாங்குபவரிடமிருந்து, ஊக்கத்தொகை எவ்வளவு வாங்கித் தந்திருக்கிறார் என்பது ராணுவ ரகசியம் அல்ல, எங்கள் காதுகளுக்கு எட்டிவிட்டது. எங்களை அதிகம் பேசவைத்து சுமுக உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.....ஓனர்கள் பெறும் ஊக்கத்தொகைக்கு என்ன காரணமோ, அதே காரணத்துக்காகத் தானே நாங்களும் கேட்கிறோம். அதாவது ஒரே மாத அவகாசத்தில் காலி செய்யத் தானே, உங்களுக்கு பல லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை! நாங்கள் கேட்பதும், அதே ஒரு மாத காலத்தில் காலி செய்யத் தானே! அந்தப் பணம் யார் பிளாட்டில் வசிக்கிறார்களோ அவர்களுக்கு கிடைப்பது தானே நியாயம்.