டீத் தண்ணியைக் குடிங்க....”, தன் கணவரிடம் தேநீர் கோப்பையைத் தந்தபடியே அருகில் அமர்ந்தாள் திவ்யாவின் அம்மா....
அவர் தந்ததும் பருகாமல் அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கணவரைக் கண்டதும் சற்று கதிகலங்கியது திவ்யாவின் அன்னைக்கு...
“என்னாச்சுங்க... ஏன் இப்படி இருக்கீங்க... வாயைத் திறந்து பேசுங்க... உடம்பு முடியலையா... இல்லை வேலைல எதாச்சும் பிரச்சனையா....”
“நாளைல இருந்து கம்பெனி மூடிட்டாங்க பவானி.... கம்பெனில வேலை செய்தவங்க பத்து பேருக்கு மேல கொரோனா வந்துடுச்சாம்... அதனால அரசாங்கத்துல இருந்து வந்து சீல் வச்சுட்டு போய்ட்டாங்க... இனி அவங்க சொல்லுற வரை திறக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க....”
“ஐயோ என்னங்க சொல்றீங்க... உங்க ஒருத்தர் வேலையை நம்பித்தானே இருந்தோம்... திவ்யா கம்பெனியும் மூடிட்டாங்க... உங்க ஒருத்தரோட வருமானத்துலதான் குடும்பம் ஓடிச்சு... அடுத்த மாசம் கல்யாணம் வேற வச்சிருக்கோம்... கம்பெனி மூடினாலும் சம்பளம் கொடுத்துடுவாங்க இல்லை... உங்க முதலாளி என்ன சொன்னாரு...”
“கஷ்டம்தான் பவானி... கம்பெனியை மூடிட்டா அவருக்கும் வருமானம் ஏது... அடுத்த மாதத்துக்குள்ள திறந்துடுவோம்ன்னு சொன்னாரு... பார்க்கலாம்... அவரு மச்சான் ஒருத்தர் ஆளுங்கட்சில இருக்காரு... அவரு வழியா எதாச்சும் பண்ணி திறந்துடுவாருன்னு நினைக்கிறேன்... ஆனா எதுவும் நிச்சயமா சொல்றதுக்கில்லை... இந்த மாசமே பாதி சம்பளம்தான்... ஓவர்டைம் காசும் இப்போதைக்கு தர முடியாது... கம்பெனி மறுபடி திறந்து ரெண்டு மாசம் கழிச்சுத் தர்றதா எல்லாத்துக்கும் எழுதித் தரேன்னு சொல்லிட்டாரு... இப்போ அடுத்த மாசம் கல்யாணத்தைத்தான் எப்படி பண்ணன்னு யோசிக்கணும்...”
“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... இன்னும் கண்டிப்பா ஒரு லட்சத்துக்கும் மேல வேணுமேங்க... ஜவுளி எடுக்கணும்... பாத்திரம் வாங்கணும்... மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுக்கணும்... நம்மக்கிட்ட இருந்த பணமும் காலி... இப்போதைக்கு ஒரு முப்பதாயிரம்தான் பேங்க்ல இருக்கு.... நான் இந்த ரெண்டு மாசம் உங்க சம்பளம் தவிர பக்கத்து வீட்டு அக்காக்கிட்ட ஒரு இருபதாயிரம், கைல இருக்கற காசு எல்லாத்தையும் வச்சு சமாளிக்கலாம்ன்னு நினைச்சேன்... உங்களுக்கு வேலையும் இல்லைன்னா அவங்க காசு கடனாக் கொடுக்கறதும் கஷ்டம்தான்....”
“அவங்கக்கிட்ட எனக்கு வேலை இருந்தாலுமே கிடைச்சிருக்காது பவானி... ஏன்னா அவர் துணிக்கடையும் மூடிட்டாங்க... எப்போத் திறப்பாங்கன்னு தெரியாது....”
“கடவுளே இப்போ என்ன செய்யப்போறோம்... அந்தம்மா ஏற்கனவே அந்த ஆட்டம் ஆடும்...