அன்று அவன் கூறியது போல் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக நாட்களை நகர்த்தினான். அவளை தவிர்ப்பதற்காகவே அவனுடைய பேருந்தை மாற்றினான்.
அவனுடைய இச்செய்கையே பிரியதர்ஷினிக்கு அவன் மேல் நன்மதிப்பை பெற்று தந்தது.
அவன் மனதில் அவளைச் சுமந்து கொண்டும் அவள் அவளுடைய அம்மாக்காக என்று இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்தது.
அன்று ஏனோ தெரியவில்லை கதிருக்கு அவளைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது. எவ்வளவு முயன்றும் அவனால் அந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை, உள்ளுக்குள் ஏதோ பிசைவது போன்றதொரு எண்ணம். சரி ஒரு ஓரமாக நின்று அவளைப் பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்று நண்பனின் இரு சக்கர வண்டியை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.
போகும் வழி எங்கும் அவள் முகமே அவனுக்கு தோன்றி தோன்றி மறைந்தது. எந்நாலும் இல்லாமல் இன்று ஏன் இப்படி அவள் நினைவு என்னை வாட்டுகிறது. ஒருவேளை அவளுக்கு ஏதோ ஆகி விட்டதா??? ச்ச... என்ன விதமான எண்ணம் இது. அப்படி எதுவும் இருக்காது நான் தேவையில்லாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். அவளை இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததனால் வந்த விளைவு என்று எண்ணிக்கொண்டு வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். பேருந்து வருவதற்கு அரை மணி நேரம் முன்பே அந்த நிறுத்தத்தை அடைந்துவிட்டான்.
ஆனால் என்னே !!! ஒரு ஆச்சரியம் அவள் நின்று கொண்டிருந்தாள். கருப்பு நிற ஷிபான் புடவை அணிந்திருந்தாள். ஆனால் முகத்தில் கலையில்லை, அவள் நெற்றிக்கு அழகு சேர்க்கும் சந்தனம் இல்லை. அவள் முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் கடுமை நீங்கி வெறுமையாக காட்சியளித்தது. அந்த பேருந்து நிறுத்தத்தில் தனிமரமாக முகம் முழுவதும் சோகத்தை அப்பிக் கொண்டு எங்கோ வெறித்து கொண்டிருந்தாள்.
அவளை ஒரு ஓரமாக நின்று பார்த்துவிட்டு சென்று விடலாம் என்று எண்ணி வந்தவன். அவளுடைய தோற்றம் அவனுக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் அருகில் சென்று நின்றான்.
ஆனாலும் பயனில்லை அவள் பார்வையில் மாற்றம் இல்லை.
தொண்டையை செருமி அவர் கவனத்தை ஈர்க்க முயன்றான்.
அதற்கும் எந்த பலனும் இல்லை. இவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.