சார்?...கோயமுத்தூர்க்காரி கொஞ்சிட்டுப் போறா...?..எனக்கென்னமோ இன்னமும் சந்தேகமாயிருக்கு...நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸோ?”
“அட ஏங்க நீங்க வேற?...ஜஸ்ட் சொல்லிட்டுப் போறா...அவ்வளவுதான்” என்றான் ரவீந்தர்.
“அதான பார்த்தேன்?...”என்றவள், “ஓ.கே.பை..பை..” என்று சொல்லி விட்டு நடந்தாள்.
*****
வீட்டு வாசற் படியிலேயே அமர்ந்து ரவீந்தரின் வருகைக்காக காத்திருந்திருந்தாள் வத்சலா.
“அம்மா...உள்ளார போகலாம்மா...இங்க பயங்கரமா கொசு கடிக்குதும்மா” ஆதேஷ் கெஞ்சினான்.
“டேய்...நீ வேணா போடா...நான் அப்புறமா வர்றேன்” என்று அவன் மேல் எரிந்து விழுந்தாள்.
தாயின் திடீர்க் கோபத்திற்கான காரணம் புரியாமல், அவன் எழுந்து உள்ளே சென்றான்.
“ச்சே!...என்ன மனுஷி நான்?...காலைல அந்த ரவீந்தர் வீட்டைப் பூட்டிட்டு...கீரை பறித்துக் கொண்டிருந்த என்னிடம் பேச ஆசையாய் வந்தார்!...நான்தான் அவரோட மூஞ்சில அடிச்ச மாதிரி சட்டுன்னு மறைஞ்சுக்கிட்டேன்!...ப்ச்...என்ன நினைச்சிருப்பார்?...பாவம்!...” இயல்பிலேயே தன்னால் யாரும் மனம் வாடி விடக் கூடாது என்று நினைப்பவள் வத்சலா.
“அம்மாடி... “காலை நேரத்துல ஒரு ஆம்பளை ஆபீஸுக்கு கிளம்பும் போது விதவையான நாம எதிர்ல போக வேண்டாம்!...அது அபசகுனம்”னுதானே நீ உன்னை மறைச்சுக்கிட்டே?...அப்புறம் ஏன் கிடந்து தவிக்கறே?” அவள் மனசாட்சி அவளைக் கேட்டது.
“உண்மைதான்...என்னால் அவருக்கு எதுவும் ஆகிடக் கூடாது!”ன்னுதான் மறைஞ்சுக்கிட்டேன்!...ஆனா...அது அவரை சங்கடப்படுத்தியிருக்குமே?”
“அதனாலென்ன?...அவர் வந்ததும்...காரணத்தை நாசூக்கா சொல்லிடு...அவர் புரிஞ்சுக்குவார்” மனசாட்சி சொல்லிக் கொடுத்தது.
“சரி...அதுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்”
“வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே!...நமது கதை புதுக்கவிதை...இலக்கணங்கள் இதற்கு இல்லை!...நான் உந்தன் பூமாலை”
பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து கசிந்து, காற்றில் மிதந்து வந்த அந்தப் பாடல், அவள் காதுகளுக்குள் நுழைந்து இதயத்தில் இனிமை கூட்டியது.
“புதுக்கவிதை படத்தில் வரும் ரஜினியைப் போல் இந்த ரவீந்தரும் இருப்பாரா?” ஏங்கினாள்.
தோளில் லாப்டாப் பேக்கைச் சுமந்து கொண்டு, சோர்வாய் நடந்து வந்தான் ரவீந்தர்.
அவனைப் பார்த்ததும் பிரகாசமான வத்சலா, “குட் ஈவினிங்” என்றாள்.
“குட் ஈவினிங்கா?...நைட்டே ஆயிடுச்சே மேடம்” என்றான்.
“மேடம் எல்லாம் வேண்டாம்!...சும்மா வத்சலான்னே கூப்பிடுங்க!...அது செரி ஏன் இவ்வளவு நேரம்?...உங்க ஆபீஸ் எத்தனை மணி வரைக்கும்?” அக்கறையோடு விசாரித்தாள்.