இன்னொருவன் கூவினான்.
“என்ன பண்ணிடும் உங்க உப்பாயம்மன்?...பேரைப் பாரு... “உப்பாயம்மன்...ஊறுகாயம்மன்”ன்னுட்டு!” சொல்லி விட்டுச் சிரித்தான் ரவீந்தர்.
அவனை அடக்க முடியாத அந்த நபர்கள் சுதாகர்ஜியைப் பார்த்து, “ஸ்வாமி...உங்க சிநேகிதரைக் கொஞ்சம் வெளிய போகச் சொல்லுங்க!...இதுக்கு மேலேயும் அவ்ர் பேசினா...வீணா இங்க ஒரு கைகலப்பு வந்திடும்” என்றான் ஒரு ஆத்திரக்காரன்.
“ரவீந்தர்...தயவு செய்து உன் வாயை மூடு...இல்லை...இந்தக் கோயிலை விட்டு வெளிய போ..”சுதாகர்ஜி கோபமாய்க் கத்த,
“போறேன்...ஆனா போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்!...பழைய கதைகளையெல்லாம் சொல்லி நல்லா படிச்சிட்டிருந்த உங்களைக் கொண்டாந்து...இந்தக் கோயில்ல மணியடிக்க வெச்சாங்க...என்ன சுகத்தைக் கண்டீங்க ஸ்வாமி?...என்னைப் பாருங்க...உங்க கூடப் படிச்சவன்...படிச்சு முடிச்சு...இப்ப ஒரு நல்ல உத்தியோகத்துல இருக்கேன்...நல்லா கை நிறைய சம்பாதிக்கறேன்!...இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடலை!...இந்த வேலையைத் தூக்கியெறிஞ்சிட்டு என் கூட வாங்க!...நல்ல வேலை வாங்கித் த்ர்றேன்!...நல்ல ஒரு எதிர்காலத்தையும் உருவாக்கித் தர்றேன்”
தொடர்ந்து பேசிக் கொண்டே போன ரவீந்தரைக் கையமர்த்திய சுதாகர்ஜி, “போதும்...எனக்கு இதுவே போதும்!..இதை ஒரு வேலையா நெனைச்சு நான் செய்யறதில்லை!...எங்க குல தெய்வத்துக்கு செய்யற சேவையாய் நெனைச்சுத்தான் செஞ்சிட்டிருக்கேன்!...இதுல வர்ற திருப்தியையும்...மனச் சாந்தியையும் நீ வாங்கிக் குடுக்கர வேலை தராது!...அதனால மேற் கொண்டு எதுவும் பேசாம இடத்தைக் காலி பண்ணு” விரட்டுவது போல் சுதாகர்ஜி பேச,
கோபமாய் வெளியேறினான்.
பைக்கை ஸ்டார்ட் செய்து, நிதானமாய் செலுத்தியவனுக்கு முழுத் திருப்தியாய் இருந்தது. “அப்பாடா...ஓரளவுக்கு நல்லாவே நடிச்சிட்டேன்!...அதே மாதிரி சுதாகர்ஜியும் நல்லாவே கோபத்தைக் காட்டிட்டார்...இது போதும்...இதை வெச்சே அடுத்த காயை நகர்த்திடலாம்”
மறுநாள் காலை ஐந்தரை மணி.
வாசல் தெளிக்க வெளியே வந்த வத்சலா, ரவீந்தர் போர்ஷனின் கதவு திறந்திருக்க, ஆச்சரியமானாள். “என்னடா இது...அதிசயமாயிருக்கு!...எட்டு மணிக்கு முன்னாடி எந்திரிக்காத மனுஷன் இன்னிக்கு அஞ்சரை மணிக்கே எந்திரிச்சிட்டார்?”
கதவுக்கு வெளியே நின்று, “சார்...சார்” அழைத்தாள்.
அவன் வராது போக, “ஒருவேளை...கதவைத் திறந்து போட்டுட்டே தூங்கிட்டாரோ?” யோசனையுடன் சற்றுப் பெரிய குரலில் அழைத்தாள்.