தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 09 - முகில் தினகரன்
ஐந்து நிமிடம் பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் ஆகியும் எந்தவித ரீஆக்ஷனும் இல்லாததால் முகிலனுக்கு லேசாய் கண்கள் செருக ஆரம்பிக்க
அவன் கால் பகுதியில் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்த போர்வை இழுக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சம் இழுக்கப்பட்டு போர்வை மெல்ல மேலே தூக்கப்பட சட்டென்று விழிப்புணர்வுக்கு வந்த முகிலன் முக்காட்டை மெல்ல விலக்கி போர்வையை இழுப்பவனைப் பார்த்த அடுத்த விநாடி அவன் மயிர்க்கால்கள் கூச்செரிந்தன.
யாரோ இழுப்பது போல் போர்வை மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருந்ததே தவிர அங்கு யாருமே இல்லை.
“என்ன இது...யாருமே இல்லாமலே போர்வை இழுபடுகிறது?” நடுங்கினான்.
சில விநாடிகளில் போர்வை முற்றிலுமாய் அவனிடமிருந்து விடுபட்டதும், யாரோ இழுத்துச் செல்வது போல் அது, முன்பகுதியில் இரண்டடிக்கு மேல் உயர்ந்திருக்க பின்பகுதி நிலத்தில் உராய்ந்தபடி சென்றது.
“அய்யோ...யாரோ கண்ணுக்குத் தெரியாத ஆள் அதை இழுத்திட்டுப் போறான்!...உடனே கத்தி ஊரை எழுப்பிட வேண்டியதுதான்!” என்று எண்ணியவன் கத்த வாய் திறந்தான்...கத்தினான்...ஆனால் சப்தம் மட்டும் அவன் வாயிலிருந்து வெளி வரவே இல்லை. “என்னால...என்னால...கத்தக் கூட முடியலையே...அய்யோ!..அய்யோ!”
அவன் உடம்பிலிருந்து வியர்வை ஆறாய்ப் பெருகி ஓட
தொண்டை வறண்டு தண்ணீருக்காய் அலைய
கண்ணெதிரே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்ச் செம்பை அவனால் எட்டி எடுக்க முடியவில்லை.
“போச்சு...நான்...செத்தேன்...இன்னிக்கு நான் செத்தேன்!” மனசுக்குள் கதறியபடியே அவன் போர்வையைப் பார்த்தான்.
யாரோ ஒரு ஆறடி மனிதன் அதைப் போர்த்துக் கொண்டு நடப்பது போல், அந்தப் போர்வை மட்டும் மொட்டை மாடியில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க
“பே...பே...” என்று முனகியபடியே உறக்கமா?...மயக்கமா?...என்று தெரியாத ஒரு நிலைக்குப் போனான் முகிலன்.
****
முகிலன் சொன்ன சிறு வயது அனுபவத்தைக் கேட்கும் போதே உடல் புல்லரித்தது