அந்த வேகத்திலேயே தடுமாறிப் போன அர்ச்சனா, “ஏண்டா...உள் நாட்டுல தயாரிக்கப்படறசில போலி பொருட்களுக்கு...வெளிநாட்டு லேபிளை ஒட்டி...அதிக விலைக்கு வித்து...ஃப்ராடு பிசினஸ் பண்ற அந்த ஃப்ராடு கம்பெனிக்கு நான் வரணுமா?....இப்படி ஆட்களை வளைச்சுப் போட்டு பிசினஸ்ல முன்னேற முயற்சி பண்றதை விட்டுட்டு நேர்மையா...ஒரிஜினல் வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி வியாபாரம் பண்ணச் சொல்லு உங்க எம்.டி.யை!” பொரிந்தாள் அர்ச்சனா.
“தல...இனிமே இவகிட்ட வாயால பேசிப் பிரயோஜனமில்லை!...அபிசேக ஆராதனை பண்ணித்தான் தீரணும் போலிருக்கு!”
“அபிசேக ஆராதனையா?” மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு, யோசிக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா.
ஆனால், அதற்குள் அவர்கள் காரியத்தில் இறங்கியே விட்டனர்.
பின்னால் நின்று கொண்டிருந்தவன் தன் பாக்கெட்டிலிருந்து சிறிய பாட்டில் ஒன்றை எடுத்து முன்னாலிருந்த தடியனிடம் தர,
அவன் கையில் வாங்கிய அடுத்த விநாடியே அதன் மேல் பகுதியை மேசையின் மூலையில் அடித்துத் திறந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த திரவத்தை அர்ச்சனாவின் முகத்தில் வீச,
அர்ச்சனா இன்னதென்று யூகித்து சுதாரிக்கும் முன், அவள் மீது விழுந்த அந்த திராவகம் அவள் முகத்தோலைப் பொசுக்க ஆரம்பித்தது.
“ஆ...அய்யோ!...அம்மா!...எரியுதே!...எரியுதே!”
முகத்திலும், கழுத்திலும், மார்பிலும் விழுந்த திராவகத் துளிகள், விழுந்த இடத்திலெல்லாம் நெருப்பாய்க் கொதிக்க,
அவள் மேனிவிலிருந்து புகையாய்க் கிளம்பியது.
அந்த அறையினுள் சதை தீயும் வாசனை காற்றில் கலக்க ஆரம்பித்தது.
தடியர்கள் மூவரும் அவள் தரையில் விழுந்து, கதறித் துடிப்பதைப் பார்த்து ரசித்து விட்டு, அறைக் கதவை நிதானமாய்ச் சாத்தி விட்டு வெளியேறினர்.
தரையில் இந்த மூலைக்கும், அந்த மூலைக்கும் உருண்டு...புரண்டு...கத்திய அர்ச்சனா, மெல்ல...மெல்ல...சுய நினைவை இழக்க ஆரம்பித்து,
கடைசியில் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
தொடரும்...
Next episode will be published on 3rd Apr. This series is updated weekly on Saturdays.