தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 05 - சுபஸ்ரீ
சஞ்சைக்கு தன் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளும் அவனை நோக்கி நகைப்பதுப் போல இருந்தது. காலணி முதல் கட்டில் வரை அனைத்துப் பொருட்களும் அவனுடையவை . ஆனால் இந்த நொடி அவை அன்னியமாகத் தோன்றின. மனதில் ஏமாற்றம் அவமானம் என விவரிக்க முடியாத உணர்வுகள் கொப்பளித்தன.
கட்டிலுக்கு எதிரே டிஜிட்டல் போட்டோ பிரேம் வைத்திருப்பான். கண்விழித்ததும் முதலில் தன் மகிழ்ச்சியான தருணங்களை கண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பது அவனின் ஐதீகம். டிஜிட்டல் போட்டோ பிரேமில் நிறைய புகைப்படங்கள் இருக்கும். தானாக ஒவ்வென்றாக மாறியபடி இருக்கும்.
அதில் அவனுக்கு மிகவும் பிடித்தமானது தனுஷ் எடுத்த செல்பி. அது சஞ்சய் பிறந்தநாள் அன்று எடுத்தது. அதில் தனுஷ் சஞ்சய் தோள் மேல் கை போட்டபடி இருப்பான். தனுஷ் பரிசளித்த விலை உயர்ந்த பைக்கில் இருவரும் அமர்ந்திருப்பார்கள்.
இருவரின் முகத்திலும் மனதிலிருந்து உதித்த அழகான ஆத்மார்த்தமான புன்னகை அலங்கரித்தது என்பதை சொல்லவும் தேவையில்லை. பிறந்தநாள் என நினைத்ததும் அன்று தான் தன் பிறந்தநாளா? என்று நிச்சயமாய் தெரியாது என எண்ணுகையில் வேதனையாயிற்று.
தன் பெற்றோருடன் தாத்தா பாட்டியுடன் எனப் பல புகைப்படங்கள். அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் எனும் உறவு முறைகளை நினைக்கையில் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை அவனுக்கு. நிஜ படங்கள் அனைத்தும் இன்று நிழல் படங்கள் ஆகிவிட்டன.
சஞ்சைக்கு சட்டென்று அழைப்பிதழ் பற்றி தோன்றவே அவசரமாய் படியிறங்கி வாயிலை அடைந்தான். இன்னமும் தனுஷ் நிச்சயதார்த்த அழைப்பிதழ் கேட்பார் அற்று கிடந்தது.
அதை எடுத்து தாத்தா அறையைக்குச் சென்றான். தாத்தா என அழைக்க முனைந்தவன் தன்னை அடக்கி ”சார்” என அழைத்தான். தாத்தா அவனை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். அவர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
”குடும்ப சொத்துதான் உனக்கில்ல ஆனா சொந்தமும் பாசமும் உண்டு சஞ்சய் . . எப்பவும் போல தாத்தானு கூப்பிடு” என கட்டளையைப் போல சொன்னார். அழைப்பிதழை கொடு என கை நீட்டினார். சஞ்சய் கொடுத்து விட்டு நகர்ந்தான். ஏனோ எதுவும் பேச மனமில்லை. வளவளவென பேசுபவன் வாய் பூட்டு போட்டுக் கொண்டது. அந்த பூட்டுக்கு சாவியும் அவனிடமே உள்ளது எனினும் அதை திறக்க மனம் விரும்பவில்லை.
”இன்விடேஷன் ரொம்ப அழகா இருக்கு” பிருந்தா கூறினாள். அவள் குரலின் பூரிப்பை தனுஷால் உணர முடிந்தது.