தினேஷின் உருவத்தில் சின்ன மாறுதல். துக்கத்திற்காகத் தலைமுடியை முழுவதுமாக மழித்திருந்தான். அவனின் முகம் இப்போது சிறு குழந்தையின் முகமாய் தெரிந்தது ரம்யாவிற்கு. அவன் வீட்டில் இன்னும் உறவினர்கள் அனைவரும் இருந்தனர். எப்படிப் பேச என்றே தெரியவில்லை. அவனிடம் தன்னுடைய புத்தகம் ஒன்று இருப்பதாகவும், அப்புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேதி வருவதால் தினேஷிடம் வாங்கிச் செல்ல வந்தேன் என்று சொன்னாள். உண்மையில் அவளின் புத்தகம் ஒன்று அவனிடம் இருந்ததால், அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் தினேஷ். அவளைப் பார்த்ததில் அவனுக்கு உள்ளூர சந்தோஷம் தான் என்றாலும் அவனால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. யாரும் அறியா நேரம் கண்களை மட்டும் சந்திக்க விட்டுக் கொண்டிருந்தனர். தினேஷின் சித்தி கொண்டு வந்த தேநீரை எவ்வளவு மெதுவாகக் குடிக்க முடியுமோ அவ்வளவு மெதுவாகக் குடித்து அங்கிருக்கும் நேரத்தை அதிகரிக்க முயன்றாள். எனினும் அவள் தன் வீட்டுக்குக் கிளம்ப நேரமாவதை தினேஷின் அண்ணன் ராஜேஷ் நினைவுபடுத்த, தினேஷின் உறவினரே வந்து பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். லைப்ரரி சென்றுவிட்டு வந்ததாக ரம்யா கூற, அம்மாவிற்கு அவளின் தாமதம் பற்றி எந்த சந்தேகமும் வரவில்லை.
இன்னும் ஒரு வாரம் சென்றது. நாட்கள் எல்லாம் விரைந்தோடி விடாதா என்று ஏங்கினாள் ரம்யா. எப்போது தினேஷ் கல்லூரிக்கு வருவான் என்று காத்திருந்தாள். மூன்றாம் வாரத்தின் திங்களில் எப்போதும் போல தினேஷ் வந்துவிட்டானா என்பதைப் பார்க்க அவன் வகுப்புக்குக் காலையிலேயே சீக்கிரம் கிளம்பிச் சென்ற ரம்யா, வகுப்பின் பெஞ்சில் தலைவைத்துத் தனியே படுத்திருக்கும் அவனைக் கண்டாள். அவளின் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தவனின் அருகில் சென்றவள், ஒரு விநாடி அவனை அணைத்துக் கொண்டு, தினேஷ் உன் அம்மா உன்னை எப்படி நல்லாப் பார்த்துப்பாங்களோ அது மாதிரி நான் பார்த்துப்பேன் என்றாள். அவனின் கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்தாள். “தாய்க்குப் பின் தாரம்னு சொல்வாங்க, நானும் உன் அம்மா மாதிரி தான்! என்றவள் அவன் கையில் ஒரு சிறிய தாளைக் கொடுத்தாள், என்னோட வரிகள் இல்ல! இதைக் கேட்கும்போது எனக்குப் பிடிச்சது அதான் உன்கிட்டயும் சொல்லலாம்னு! கிளாஸுக்கு நேரமாச்சு அப்புறம் பார்க்கலாம்! “ என்று கிளம்பினாள்.
அந்த பேப்பரைப் பிரித்துப் படித்தான்,
“பத்து மாதம் தான் தாய் வயிற்றில்
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே!