"என்ன சொல்றப்பா, நீ .......நீ ....?”
"ஆமாம் பாட்டிம்மா, நான் உங்க பேரன் தான் நீங்க வேண்டாம்னு உங்க மருத்துவச்சிக் கிட்ட கொடுத்தனுப்பிய பேரன்தான்......" என்றான் புன்னகையோடு.
"ஐயோ என் ராஜா என்ன மன்னிச்சுடுடா, என் ராஜா.... நான் தப்பு.. தப்பு பண்ணிட்டேன்டா என் ராஜா! "என்று கதறினாள், தனத்தின் அம்மா லக்ஷ்மி.
"இல்ல பாட்டிம்மா, உங்களை தப்பா நினைச்சா, உங்க மகளை, என் அம்மாவை நச்சரிச்சு உங்களை பார்க்க வந்திருப்பனா. என்ன பாட்டிம்மா எனக்கு எப்படி உங்க மேல கோவம் வரும்?" என்று அவளை சமாதான படுத்தினான்.
லக்ஷ்மிக்கு அவனருகில் சென்று கன்னத்தை வழித்து முத்தம் கொடுக்க ஆவல், என்ன உயரமா வளர்ந்திருக்கான் , எவ்வளவு அழகு என் பேரன் என்று மனத்தினுள்ளேயே நினைத்தார், அவனருகில் செல்லவே மனம் கூசிற்று, என்ன வேலை செய்தேன் நான் இப்போ இவனை எப்படி உறவு கொண்டாடுவது என்று மனதில் நொந்துக் கொண்டாள்.
தன் தங்கைகள் இருவரின் முகத்தையும் பார்க்க கூசினாள் தனம். அவள் அம்மாவும்தான், அந்த இரு தங்கைகளுக்கும் ஒன்றுமே தெரியாது, இப்போது இவனால் தெரிந்துவிட்டது.
"என்னம்மா பேசறீங்க ஒண்ணுமே புரியலையே, அக்காவுக்கு குழந்தை பொறந்தது உனக்கு ஏற்கனவே தெரியுமா? அதுவும் இவ்ளோ பெரிய மகனா அக்காவுக்கு? நீ ஏன் யார் கிட்டயும் சொல்லவேயில்லியே?" என்று வள்ளி கேட்டாள் .
"அது... அது வந்து..போடி அக்காக்கும் அந்த பையனுக்கும் சாப்பாட்டுக்கு ஏதாச்சும் செய், சீக்கிரம் தயார் பண்ணு! "
"என்ன? என்ன தொரத்தற?" என்று எதிர்த்து நின்றாள் வள்ளி.
"ஏய் போய் வேலையை பார், சும்மா தொந்தரவு பண்ற ?" என்று அவளை துரத்தி விட்டாள், அவள் அம்மா லக்ஷ்ம.
"என்ன தனம் எப்படியிருக்க, இவ்ளோ வருஷம் எங்களை பாக்கணும்னு தோணல இல்ல?"
"அது... உனக்குத்தான் தெரியுமே என்ன விஷயம்னு, அதான் எனக்கு வர இஷ்டமில்லை, உன் ரெண்டு பொண்ணுகளுக்கு கல்யாணமாகணுமே அதான் தூரவே இருந்துட்டேன், இன்னிக்கு கூட இவன் தொந்தரவு பண்ணான் அதான் இங்கே வந்தேன், இல்லேன்னா....."
"ஏண்டி இப்படிலாம் பேசற, நாங்க அப்படி என்ன செய்ஞ்சோம், நீ எங்களை வெறுக்க?"
"தெரியலம்மா ... எனக்கு சொல்ல தெரியலம்மா...." அழுதாள், அந்த வீட்டை சுத்தி சுத்தி பார்த்த அஜய் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோளில் கையை போட்டு கொண்டான்