தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 12 - முகில் தினகரன்
மூன்றாவது தளத்தை அவன் நெருங்க நெருங்க பிணம் எரியும் வாடை அதிகரித்துக் கொண்டே போனது.
“ராதிகா இங்க அந்த வாடை எக்கச்சக்கமா இருக்கு!..நோட் பண்ணிக்க!...நோட் பண்ணிக்க!” கத்தலாய்ச் சொன்னான்.
“ம்...நோட் பண்ணிட்டேன்!”
“இப்ப தேர்ட் ஃபுளோர் வந்துட்டேன்!...அந்தக் கடைல லைட் எரியுது!...உள்ளே யார் யாரோ நடந்துக்கிட்டிருக்காங்க!...காமிராவுல அது தெரியுதல்ல?”
“ம்ம்...நல்லாவே தெரியுது!”
“நான் இப்ப அந்தக் கடைக்குள்ளார போறேன்!”
உள்ளே சென்ற முகிலன் அங்கு நடந்து கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்து மிரண்டு போனான். தொண்டை வறண்டு போனது.
அவர்கள் மனிதர்களல்ல.....பாதி எரிந்தும் எரியாத பிணங்கள்!...எரிய எரிய எழுந்து வந்து விட்டதைப் போன்று நடந்த வாக்கிலேயே கருகிக் கொண்டிருக்கும் சவங்கள்!...அந்த இடம் முழுவதிற்கும் புகையையும் நாற்றத்தையும் அளவின்றிப் பரப்பிக் கொண்டிருக்கும் அரைவேக்காட்டுப் பிரேதங்கள்.
“ராதிகா...நடமாடிக்கிட்டிருக்கிற உருவங்கள் எல்லாம் நல்லாத் தெரியுதா?...அதெல்லாம் மனிதர்களல்ல...எரிய எரிய எந்திரிச்சு வந்து நடமாடிக்கிட்டிருக்கற பாதி எரிந்த பிணங்கள்!”
“ஆமாம்ப்பா...அப்படித்தான் தெரியுது!...எனக்கு இங்கிருந்து பார்க்கவே ரொம்ப பயமயிருக்கு!...ஜாக்கிரதை முகிலன்!”
எந்த நேரத்தில் ராதிகா அப்படிச் சொன்னாளோ?...அந்த உருவங்கள் அத்தனையும் ஒட்டு மொத்தமாய் முகிலனின் பக்கம் திரும்பி ஒரு ஆவேசத்துடன் அவனை நோக்கிப் பாய்ந்து வரத் தொடங்கின.
தொடர்ந்து அங்கிருந்தால் நிச்சயம் ஏதேனும் விபரீதம்தான் நிகழும் என்பதை உணர்ந்த முகிலன் ஓட்டமும் நடையுமாய் அந்தக் கடையை விட்டு வெளியேறினான்.
ராதிகா மொபைலில் கதறினாள். “முகிலன்...உங்க தலைக்கு மேலே!”
சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்த முகிலன் வெலவெலத்துப் போனான்.
இடுப்பு வரை மட்டுமே இருந்த ஒரு பாதி உடல் சீலிங்கில் கையால் ஊர்ந்தபடியே அவனைத் துரத்திக் கொண்டிருந்தது.
தனது வேகத்தை இன்னும் அதிகமாக்கிக் கொண்டு ஒரு வழியாய் அந்தக் கடையை விட்டு வெளியே வந்தவன் நேரே படியிறங்கி கீழே சென்றிருக்கலாம்.