எனக்கு பசிக்குது." என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தாள், அவனும் சிரித்துக் கொண்டே போய் உட்கார்ந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு சிரித்துக் கொண்டனர்.
இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தனர், அவள் எழ முனைந்த போது, அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான் அஜய். "சொல்லும்மா, என்ன ஆச்சு, அப்பா நினைப்பு வந்துடுத்தா, ஏன் அழுத? இல்ல யாராவது ஏதாவது சொன்னார்களா? அப்படியெல்லாம் என் அம்மா அழற டைப் இல்லியே?" என்று ஒரு கேள்வியோடு தன் அம்மாவின் பதிலுக்காக காத்திருந்தான்.
"ஒண்ணுமில்லப்பா, என்னை யாரும் எதுவும் சொல்லல, நானும் அழல!"
"அம்மா இதுக்கு மேல நான் ஒன்னும் கேட்கமாட்டேன், ஆனா நீ அழறது இதுவே கடைசியா இருக்கனும், அப்பாவும் கூடிய சீக்கிரமே நம்மோடு சேர்ந்துடுவார்மா அதனால இனி நீ எதுக்காகவும் அழ கூடாது."
"அது எப்படி அஜய் அப்பா கூடிய சீக்கிரமே நம்மோடு சேர்ந்துடுவார்னு அவ்வளவு உறுதியா சொல்ற?"
"எல்லாம் ஒரு நம்பிக்கைதான், என் உள் மனசு சொல்லுது அப்பா சீக்கிரமே நம்மோடு சேர்ந்துடுவார்னு! "
அவள் சிரித்தாள், "ஏன்மா நம்பிக்கை இல்லையா?"
"நம்பிக்கை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா வந்தா?"
"ஏன் நிறுத்திட்ட, ஆனா வந்தா?"
"தெரியல என்ன பண்ணனும், இன்னும் பிரச்சனைதான் பெரிசாகும்!"
"என்ன பிரச்சனை வரும்?"
"என்ன பிரச்சனை வரும்னு சொல்ல தெரியல அஜய், நானும் ரொம்ப குழப்பத்துலதான் இருக்கேன் ."
"என்ன குழப்பம்மா?"
அத பத்தி இப்ப என்ன? விடு, உங்க அப்பா வரும்போது பார்த்துக்கலாம் அஜய். அப்புறம் என்ன ரொம்ப பிசியா இருந்த, ஏதாவது ப்ராஜெக்ட்டா?" அவன் தன் அம்மாவை தீர்க்கமாக பார்த்தான், அவள் ஏதோ பேச்சை மாற்றுகிறாள் என்று புரிந்துக் கொண்டு,
"ஆமாம்மா ஒரு ரைட் அப் பண்ணிண்டுருக்கேன், அது ஒரு ஆர்டிகிலா பப்லிஷ் பண்ணனும். அதுக்கு ஏதோ எழுதிண்டிருந்தேன் மா. "
"ஓ குட்... பப்லிஷ் ஆனவுடன் என்கிட்டே சொல்லு நான் படிக்கறேன்!"
"ஏன்மா அதுக்கு முன்னாடியே படிக்க மாட்டியா?"