சொல்றேன் நல்லாக் கேட்டுக்கடா!..இந்த ஊரு என்ன?..எங்க வீடு என்ன?...அந்தக் கிழக்குச் சீமை கிராமமே “வேண்டாம்”னு தடுத்தாலும், “போங்கடா...நீங்களுமாச்சு...உங்க பொண்ணும் ஆச்சு”ன்னு சொல்லி அத்தனை பேரையும் தலை முழுகிட்டு... “நட்புதான் பெரிசு”ன்னு சொல்லிட்டு...கல்யாணமே வேண்டாம்னுட்டு வந்திடுவேன்...தெரியுமா?” உணர்ச்சி பொங்கச் சொன்னான்.
கண்களில் நீர் கோர்த்தது முரளிக்கு.
உதடுகள் தழுதழுத்தன.
“சேகர்...என்னால இந்த சந்தோஷத்தைத் தாங்க முடியலைடா!....அறியாத வயசுல நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் உருவான நட்பை மதிச்சு...இன்னிக்கு வரைக்கும் என் கூட அன்பாகவும், பாசமாகவும் இருக்கியே?...நீயெல்லாம் வணங்கப்பட வேண்டிய ஆத்மாடா!...உனக்கெல்லாம் அந்த ஆண்டவன் நீண்ட ஆயுளைக் குடுத்து உலகத்துக்கு பல நன்மைகளை உன் மூலமா உருவாக்கித் தர வேண்டும்டா!” என்றான் முரளி தனசேகரின் கைகளைப் பற்றிக் கொண்டு கரகரத்த குரலில்.
“என்ன முரளி நீ?...பொம்பளையாட்டம் இதுக்கெல்லாம் அழறே?...வா வா கிளம்பலாம்” என்றபடியே தனசேகர் பைக்கை நோக்கிச் செல்ல, முரளியும் எழுந்து உடன் நடந்தான்.
பைக்கில் செல்லும் போது, “முரளி...என் கல்யாணத்துல நீதான் எல்லா வேலைகளையும் பொறுப்பா எடுத்துச் செய்யணும்!...தயங்கித் தயங்கி நிற்கக் கூடாது!...ஒதுங்கி ஒதுங்கிப் போகக் கூடாது!..என்ன சரியா?..என்னைப் பொறுத்த வரையில் பெரிய வி.ஐ.பி.நீதான்!” என்று தனசேகர் உரத்த குரலில் சொல்ல,
“ம்ம்ம்...எனக்கும் அப்படிச் செய்ய ஆசைதாண்டா!...ஆனா உங்க வீட்டுல பெரியவங்க...அதை அனுமதிப்பாங்களா?ன்னு தெரியலையேடா” என்றான் முரளி.
அவன் குரல் வருத்தமாய் ஒலிப்பதற்கான காரணம் தனசேகருக்குத் தெரியாமலில்லை. “எதைப் பத்தியும் நீ கவலைப்பட வேண்டியதேயில்லை!...ஏன்னா...நான் ஏற்கனவே எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டேன்!... “என் கல்யாணத்துல முரளி...உரிமையா வந்து எல்லா வேலைகளையும் செய்வான்...அவனை யாரும் எதுவும் சொல்லக் கூடாது!...அப்படி யாராவது ஏதாவது சொல்லி அவனை சங்கடப்படுத்தினா...அப்புறம் தாலி கட்ட மாட்டான் இந்த தனசேகர்”ன்னு ஒருவித மிரட்டலே குடுத்து வெச்சிருக்கேன்!..அதனால...யாரும் உன்னைய எதுவும் சொல்ல மாட்டாங்க!...போதுமா?” கழுத்தைத் திருப்பி முரளியைப் பார்த்து அவன் சொல்ல,
“போதும்டா...போதும்டா!...நீ தலையைத் திருப்பி ரோட்டைப் பார்த்து ஓட்டுடா” என்றான் முரளி.
நட்புச் சங்கிலியை இவர்கள் இருவரும் வெகுவாய் இறுக்கிக் கொண்ட போதிலும், அந்த விதியரக்கன் அதை வேறு மாதிரியல்லவா வடிவமைத்திருக்கிறான்?.
தொடரும்