மதியம் கோயமுத்தூர் போயி ஜோனல் ஆபீஸ்ல என்னோட டிரான்ஸ்பர் ஆர்டரை வாங்கிக்கிட்டு...நாளைக்கு நைட் பத்து மணிக்கு சென்னை டிரெயின் ஏறிடுவேன்” என்றான் ரவீந்தர்.
சுதாகர்ஜியின் மனைவி கொண்டு வந்து கொடுத்த காஃபியை வாங்கிப் பருகி விட்டு, அவளிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான் ரவீந்தர்.
அன்று இரவு கஸ்தூரி அய்யாவிடம் டிரான்ஸ்பர் விஷயத்தைச் சொல்ல, அவரும் லேசாய் சங்கடப்பட்டார். அவர் முதுகிற்குப் பின்னால் நின்றிருந்த வத்சலா பகிரங்கமாகவே கண்ணீர் சிந்தினாள்.
இரவு பதினோரு மணியிருக்கும், கதவு தட்டப்படும் சப்தம் கேட்க எழுந்து போய்க் கதவைத் திறந்த ரவீந்தர் வத்சலா நிற்பதைப் பார்த்து, “என்னங்க தூக்கம் வரலையா?” கேட்டான்.
“தூங்க முடியாத அளவுக்கு ஒரு பாறாங்கல்லைத் தூக்கி தலை மேலே போட்டுட்டீங்களே?” என்றாள் கோபத்துடன்.
“என்னங்க பண்றது?...மேனேஜ்மெண்டோட உத்தரவை மறுக்க முடியாது!...மறுத்தா வேலையில் நீடிக்க முடியாது!..வேலையில் நீடிக்கலேன்னா...சோறு கிடையாது!...சோறு இல்லேன்னா செத்துப் போயிடுவேன்”.
“யோவ்..நீ இல்லேன்னா நான் செத்துடுவேன்...அதுக்கு என்ன பண்றது?” என்று கேட்க வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டு, “சென்னை போனதும் என்னை மறந்திடாதீங்க!...கால் பண்ணிப் பேசுங்க!” என்றாள்.
“உங்க நெம்பர் குடுங்க” என்று கேட்டு வாங்கி, தன்னுடைய மொபைலில் பதித்துக் கொண்டான்.
“உங்க காதலுக்காக....ஸாரி....உங்க காலுக்காக காத்திருப்பேன்” என்றாள் வத்சலா.
எல்லாம் புரிந்த போதிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், புன்னகையை மட்டும் பதிலாய்த் தந்து விட்டு, “குட் நைட்” சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் திரும்பினான் ரவீந்தர்.
“படவா...இனி வரப் போற நைட்டெல்லாமே குட் நைட் இல்லைடா...ஒன்லி பேட் நைட்ஸ்” சொல்லிக் கொண்டு கண்ணீரோடு தன் வீட்டிற்குள் சென்றாள் வத்சலா.
அவள் அழுகையின் வீரியத்தையும், கண்ணீரின் அளவையும் அவள் தலையணை மட்டுமே அறியும்.
அறைக்குள் வந்த ரவீந்தர், “பாவம் இந்தப் பொண்ணு....வீண் கற்பனைகளை மனசுல வளர்த்து வெச்சிருக்கும் போலிருக்கு!...ப்ச்...மார்க்கெட்டிங் ஆளான நான் எல்லோர் கிட்டேயும் இனிமையாகவும்...ஜாலியாகவுமே...பேசிப் பழகிட்டேன்!...அதோட விளைவுகள்தான் இதெல்லாம்!...ஹூம்...இன்னும் என்னென்ன இருக்கோ?”
தொடரும்...
Next episode will be published on 28th May. This series is updated weekly on Fridays.