அம்மாவையும், அப்பாவையும் அமரச் சொன்ன முரளி, அவர்கள் எதிரில் தான் உட்காராமல் தள்ளி நின்று கொண்டான்.
அவர்களும் அவனை உட்காரச் சொல்லவில்லை.
“தம்பி...நான் சுற்றி வளைச்சு பேச விரும்பலை...நேராவே விஷயத்துக்கு வர்றேன்!...உன்னோட சிநேகிதனோட வருங்கால மாமனார் வீட்டுக்கு அவன் கூட நீயும் போனியா?” பொன்னுரங்கம் கேட்டார்.
“நான் “மாட்டேன்”னுதான் சொன்னேன்!...ஆனா தனசேகர் வற்புறுத்திக் கூப்பிட்டதால்...வேற வழியில்லாமல் போனேன்!” என்றான் முரளி.
“சரி...அது பரவாயில்லை!...அங்க போயி உள்ளார..அந்த ராமலிங்க பூபதிக்கு எதிர்ல நாற்காலில உட்கார்ந்தியா?” பொன்னுரங்கத்தின் முகத்தில் கடுமை தென்பட்டது.
முரளி வாயைத் திறந்து பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
“முரளித் தம்பி...அவங்க குடும்பமெல்லாம் நம்ம குடும்பம் மாதிரி...வர்ண பேதம் பார்க்காம...ஒண்ணுமண்ணாப் பழகி......விட்டுக் குடுத்துப் போற குடும்பமில்லை!...இன்னமும் பழைய காலம் மாதிரியே மேல் வர்க்கத் திமிரோட இருக்கற குடும்பம்!...என் மகன் அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குத்தான் மாப்பிள்ளையா போறான்!...அதனால....”என்று பொன்னுரங்கம் நிறுத்த,
“அதனால...?”
“இனிமேல்..என் மகன் கூடப் பேசறதை....பழகறதை நிறுத்திக்கோ...!...அதுதான் அவனோட எதிர்காலத்துக்கும் நல்லது!...உன்னோட எதிர்காலத்துக்கும் நல்லது!”சுந்தரி சொல்லி முடித்தாள்.
சில நிமிடங்கள் தரையையே நிலைக்குத்திப் பார்த்தபடி நின்ற முரளி, கரகரத்த குரலில் சொன்னான்.
“அய்யா... “சாப்பிடறதை நிறுத்திக்கோ....தூங்கறதை நிறுத்திக்கோ...அவ்வளவு ஏன்?....மூச்சு விடறதை நிறுத்திக்கோ”ன்னு கூடச் சொல்லுங்க!...தாராளமா செய்யறேன்!...ஆனா... “தனசேகர் கூடப் பேசாம...பழகாம இரு!”ன்னு மட்டும் சொல்லாதீங்க அய்யா!...அது என்னாலும் முடியாது!...அவனாலும் முடியாதுங்க அய்யா!...நாங்க ரெண்டு பேருமே செத்துப் போனதுக்கு சமம் அய்யா அது”
“புரியுது தம்பி...நீயும் அவனும்...இன்னிக்கு நேத்து பழகின சிநேகிதனுக இல்லை!...கிட்டத்தட்ட இருபத்தி அஞ்சு வருஷமா உசுருக்கு உசுரா பழகினவங்க!னு தெரியும் தம்பி!...நெஞ்சைத் தொட்டுச் சொல்லு....உன்னால...உன் சிநேகத்தினால... அவனுக்கு அமையப் போற ஒரு நல்ல வாழ்க்கை கெட்டுப் போகுது!ன்னா அதை நீ ஏத்துக்குவியா?” சுந்தரி மனதைக் கரைய வைக்கும் முகமாய்ப் பேசினாள்.