தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 31 - முகில் தினகரன்
கோவை ரயில் நிலையம்.
பிளாட்பாரம் எண் 2ல் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. தோளில் பேக்குடன் அந்த பிளாட்பாரத்தில் நடந்த ரவீந்தர் அந்த ஆவின் பூத்தை அடைந்து, வாட்டர் பாட்டில் வாங்கித் தன் பேக்கில் செருகிக் கொண்டான்.
பாக்கெட்டிலிருந்த டிக்கெட்டை எடுத்துப் பார்த்தவன், “எஸ் 9....சீட் நெம்பர் 56” என்று சொல்லிக் கொண்டு மீண்டும் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டு எஸ்9 கோச்சை நோக்கிச் சென்றான்.
உள்ளே நுழைந்து தன் இருக்கையைக் கண்டுபிடித்து உட்கார்ந்தவன், மொபைலில் நேரம் பார்த்தான்.
10.05
வாட்ஸ் அப்பில் நிறைய போஸ்டிங்ஸ் வந்து குவிந்திருக்க, ஒவ்வொன்றாய்ப் பார்த்து டிலீட் செய்து கொண்டிருந்தவன், ஒரு புது நெம்பரிலிருந்து ஏதோ ஒரு போட்டோ வந்திருக்க, ஆர்வமாய்ப் பார்த்தான்.
“என் தங்கையுடன் நான்”
“நிர்மலா, அன்னை தெரஸா முதியோர் இல்லம்”
என்று போடப்பட்டு அதற்குக் கீழேயிருந்த புகைப்ப்ட்த்தில் அந்த நிர்மலாவும், அவளுடன் காவ்யாவும் இருக்க, “அடடே...அந்த நிர்மலாவின் தங்கையா காவ்யா?” ஆச்சரியமானான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் மெல்ல நகரத் துவங்கியது ரயில்.
அப்போது கையில் ஒரு பேக்கைத் தூக்கிக் கொண்டு வேக வேகமாய் ஓடி வந்து நகரும் ரயிலில் ஏற முயன்ற அந்தப் பெண் விழப் போக, கதவருகே நின்றிருந்த அந்த நடுத்தர வயதுக்காரர், அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டார். “ஏம்மா...ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி வரக் கூடாதா?...இப்படிக் கடைசி நேரத்துல வந்து சர்க்கஸ் பண்றியே?...உள்ளார விழுந்தா என்ன ஆகிறது?”
“ஸாரி சார்...நான் வந்த ஆட்டோ டிராபிக்ல மாட்டிக்கிச்சு...” சொல்லிக் கொண்டே தன் இருக்கையைத் தேடிக் கொண்டு சென்றாள். வழியில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞன். “என்ன நெம்பர்?” கேட்டான். அழகான பெண்களுக்கு உதவ ஆயிரம் பேர்.
“55” என்றாள்.
“அடுத்த கம்பார்ட்மெண்ட்” என்று சொன்னவன் பார்வையில் தப்பு இருந்தது.
அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்றவள், 56-ம் எண் இருக்கையில் அமர்ந்திருந்த ரவீந்தரைப் பார்த்ததும், விழிகளை அகல விரித்து, “நீ....நீங்களா?” கேட்டாள்.
“கா...வ்...யா?...நீங்க எப்படி இங்கே?” என்று கேட்டவாறே அவளுடன் வேறு யாராவது