“ஓ.கே.!...அப்ப உண்மையே சொல்லிடறேன்!...உங்களுக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு”ன்னு கேள்விப்பட்டதும் உடனே நானும் அப்ளை பண்ணி...வாலண்ட்ரியா கேட்டு வாங்கிட்டேன்!..இதே மாதிரிதான் போன தடவையும்...உங்களுக்கு பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆனதும்..நானும் பொள்ளாச்சி கேட்டு வாங்கிட்டு வந்தேன்!...”என்று சாதாரணமாய்ச் சொன்னவள், சட்டென்று குரலைத் தாழ்த்தி கொண்டு, “நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ..போ..! நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா...வா...வா..” என்று பாடினாள்.
“புரியலையே?” கீழுதட்டை விரலால் இழுத்தவாறே சொன்னான்.
“ம்ம்ம்...என் இதயத்தை உங்க கிட்ட மார்க்கெட்டிங் பண்ணத்தான் நீங்க போற இடத்துக்கெல்லாம் வந்திட்டிருக்கேன்!...இது புரியலையா மார்க்கெட்டிங் மன்னனுக்கு?” என்றாள் முகம் சிவக்க,
கோவையிலிருக்கும் போதே அவள் மீது சின்னதாய் மையல் கொண்டிருந்த ரவீந்தர், சில பல காரணங்களால் அதை அப்படியே மனதின் ஆழத்தில் போட்டுப் புதைத்து வைத்திருந்தன். இப்போது அவள் சொன்ன பதில் புதைந்திருந்த அந்த மையல் உணர்வைத் தூண்டி விட, உற்சாக ஊஞ்சல் ஆடினான். “பதிலுக்கு நான் என்ன தரணும்?” வேண்டுமென்றே கேட்டான்.
“தா....லி” சற்றும் தயங்காமல் “பளிச்”சென்று சொன்னாள்.
யோசித்தவன், “ம்ம்ம்...இது மார்கழி மாசம்...அதனால தை மாசத்துல வாங்க வாங்கிக்கறேன்” என்றான் ரவீந்தர். கோவை, முதியோர் இல்லத்திலிருக்கும் தன் தாய் ஜோதியம்மாவின் விருப்பமும் இந்த காவ்யாவைத் தனது மருமகளாக்கி கொள்வதுதான், என்பதால் தைரியமாகவே சொன்னான்.
சிரித்துக் கொண்டே தலையாட்டியவளின் கூந்தல் வேகமாய் வீசும் ஜன்னல் காற்றில் பறந்து அவன் முகத்திலடிக்க,
அதைத் தள்ளி விடாமல், அதன் சுகந்த மணத்தை அனுபவித்தான்.
இணையாத தண்டவாளங்களின் மீது இரு இதயங்கள் இணைய,
“காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும், அந்தக் கதாநாயகன் உன்னருகில் இந்தக் கதாநாயகி வேண்டும்”
யாரோ ஒருவருடைய மொபைலில் ரிங் டோனாய் அந்தப் பாடல் ஒலித்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
அப்போது ரவீந்தரின் மொபைலுக்கு கால் வர, “ஹலோ...போன் அடிக்குது எடுத்துப் பேசுங்க” என்றாள் காவ்யா.
“ஓ...ஸாரி” என்றபடி எடுத்துப் பார்த்தான். சுதாகர்ஜி அழைத்திருந்தார். “என்ன ஜீ?..ஏதாவது பிரச்சினையா?”