தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 09 - பிந்து வினோத்
“மஞ்சு, நாலு நாள் கழிச்சு வருவேன்னு நினைச்சேன்,” என்று நிர்மலா சாதாரணமாக பேச்சை தொடங்கவும், மஞ்சு அப்போதைக்கு வேறு எதையும் கேட்கவில்லை.
நிர்மலா வந்த உடனே வினோதினி வேலை இருப்பதாக சொல்லி அறைக்குள் சென்று மறைந்தாள்...
மஞ்சு மற்றும் அவளின் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்த நிர்மலா நினைவு வந்தவளாக தேநீர் தயாரிக்க சமையலறைக்கு செல்லவும், வினோதினி குழந்தையுடன் மீண்டும் தோன்றினாள்.
இதை எல்லாம் வேறு யார் கவனித்தார்களோ இல்லையோ, மஞ்சு கவனித்தாள்.
வினோதினி தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் மஞ்சு அக்கறை காட்டி இருந்திருக்க மாட்டாள்.
வினோதினி எனும் போது கண்டும் காணாமலும் இருக்க அவளுக்கு மனம் வரவில்லை...
அதுவும் வினோதினியின் ‘டிஷூம் டிஷூம்’ ஜோதியுடன் என்றால் கூட அவளால் புரிந்துக் கொள்ள முடியும்!!! நிர்மலா??? ஷண்முகம்??? எப்படி முடியும்???
முழு விபரம் தெரிந்துக் கொண்டே தீருவது என்ற முடிவுக்கு அப்போதே வந்தாள்.
பெற்றோர் முன்னிலையில் விநோதினியிடம் எதையும் கேட்க முடியாமல் வாயை மூடிக் கொண்டிருந்தவள், அம்மாவிடம் ரகசியமாக,
“நான் இரண்டு நாள் இங்கே தங்கிட்டு வரேன்ம்மா...” என்றாள்.
பத்மாவிற்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! ஆனாலும் பத்மாவிற்கு ‘பெர்சனலி’ நிர்மலாவை பிடிக்கும் என்பதால் மஞ்சுவின் நல்ல மருமகள் முயற்சியை அவள் தடுக்கவும் இல்லை!
“ட்ரஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே மஞ்சு??? எப்படி மேனேஜ் செய்வ???” என்று மட்டும் கேட்டாள்.
“நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி வச்சிருந்தது நிறைய இருக்கும்மா. அதுவே போதும்...”
பத்மா கணவரிடம் மஞ்சுவின் விருப்பத்தை சொல்ல, பிரேம்குமாரும் ஏற்றுக் கொண்டார்.
சாதனா வருவதற்கு முன் வீடு திரும்ப வேண்டும் என்று சொல்லி அவர்கள் இருவரும் அதிக நேரம் இருக்காமல் கிளம்பினார்கள்.
அவர்களுக்கு விடைக் கொடுத்து விட்டு நேராக ஷண்முகம் – வினோதினி அறைக்கு சென்றாள் மஞ்சு. அவள் கதவை லேசாக தட்டவும்,
“வா மஞ்சு,” என்று குரல் கொடுத்தாள் வினோதினி.
“எப்படி வினோ, நான் தான்ன்னு கண்டுப்பிடிச்சீங்க?”
வினோதினி உடனே பதில் சொல்லவில்லை... சின்ன இடைவெளிக்குப் பிறகு,