ஒய்வுப் பெற்றவர்.
தாய் கோதாவரி . . . ம்கூம் . . . நீங்கள் நினைக்கும் கோதவரி இல்லை. இவர் குண்டாக தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி, பட்டு புடவை, வைர தோடு, மூக்கில் வைர பேசரி என ஜொளிப்பவர். நல்ல மனசு. வங்கியில் பணிபுரிபவர்.
ராகவனுக்கு சிறுவயதிலேயே சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என ஆசை. நிறைய படங்கள் பார்த்தபடி இருப்பான். படிப்பில் அசகாயசூரன் இல்லை. கடைசி நேரத்தில் படித்து எப்படியோ அறுபது மதிப்பெண்கள் எடுத்துவிடுவான்.
அது பனிரெண்டாம் வகுப்பு முடித்த தருணம். எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான்.
“எங்கடா பி.ஈ. சேர போற?” விசு கேட்டார். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து சவரம் செய்தபடி
“அப்பா நான் . . .”தயங்கியவனிடம்
“சொல்லுடா பி.ஈ வேண்டாமா சரி பி.டெக் படி” என்றார்.
“இல்லப்பா . . . எனக்கு சினிமா டைரக்டர் ஆகணும்னு ஆசை” மென்றுமுழங்கினான்.
அவனின் ஆசையை கேட்ட விசு முதலில் திடுக்கிட்டார். அந்த தாக்கம் அவர் முகத்தில் பிளேட் லேசாக பட்டு சிறிய ரத்த கீறல். மனதிலும் ஒருவகை கீறல்.
“என்னங்க?” என அதிர்வு அலைகளை கோதாவரி முகம் காட்ட “பொறுமை” என கைக் காட்டினார் கண்ணாடி வழியே
“அதுக்கென்னடா தாரளமா டைரக்டராகு” என்றார்.
“நிஜமாவா?” சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை ராகவன். சண்டையில் வீடே இரண்டாகும் என நினைத்தான்.
“நல்ல கதை ரெடி பண்ணு . . . உன் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஷார்ட் பிலிம் எடுத்து யூடியூப்ல போடு . . . முடிஞ்சா எனக்கும் உன் அம்மாக்கும் ரோல் கொடு . . . நான் காலேஜ் டிராமால நல்லா நடிச்சவன்டா முன்அனுபவம் இருக்கு தெரியுமா?” என்றார் பெருமையாக.
ராகவனுக்கு இரண்டு காதுகளிலும் கபகபவென புகை வராத குறைதான் “அப்பா நான் ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யாலாம் வெச்சி படம் எடுக்கணும்” என்றான் கொதிப்பாக
“ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா” பெயர்களை அழுத்தமாக கூறிய கோதாவரி “அவங்களுக்கு இது தெரியுமா?“ தன் கண்யாடியை சரிசெய்தபடி கேட்டார். முழி கண்ணாடி வழியே வெளியே தெரித்துவிடும் போல இருந்தது.
“நிச்சயமா ஒரு நாள் நான் பெரிய டைரக்டர் ஆவேன்மா” சூளுரைக்காத குறையாக அவன்