விசு தன் பால்ய நண்பன் வரதராஜனை எதிர்பாரா விதமாக ஒருநாள் கோயிலில் சந்தித்தார். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
“என் தம்பி பொண்ணு இருக்கா . . . உன் பையனுக்கு பாக்கலாமே” என வரதராஜன் சொல்ல
“என் பையனுக்கு இன்னும் கல்யாண பேச்சே ஆரம்பிக்கல” விசு தயங்கினார். அதான் இப்ப இந்த நிமிஷம் ஆரம்பிசாச்சே என சிரித்தபடி பத்மினியின் போட்டோ ஜாதகம் பயோடேட்டா அடங்கிய கவரை விசு கையில் திணித்தார்.
ஆனால் விசு கேரண்டி வாரண்டி என எதுவும் தரவில்லை “நான் பெத்தது அப்படி”என மனதை தேற்றிக் கொண்டார். ஆனால் பத்மினியை போட்டோவில் பார்த்ததுமே விசு மற்றும் கோதாவரிக்குப் பிடித்துப் போயிற்று.
எல்லாப் பெற்றோரை போல தங்கள் மகனை மணக்கோலத்தில் காண ஆசைப்பட்டனர். ஆனால் தங்கள் சீமந்தபுத்திரன் இதைக் கேட்டால் மண்ணுக்கும் விண்ணுக்கும் அல்லவா குதிப்பான். அதனால் கல்யாண பேச்சை நிறுத்திவிட தான் விசு நினைத்தார். அவன் விருப்பம் தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என நினைத்தார்.
கோதாவரி “முதல்ல ஜாதகம் பார்க்கலாம். அப்புறம்தான் மத்ததெல்லாம்” என விசு வயிற்றில் மில்கை ஊற்றினார். அப்பாடா ஜாதக பொருத்தம் இல்லைனா பிரச்சனை இல்லை என எண்ணினார்.
“ரெண்டு ஜாதகமும் பேஷா பொருந்தி இருக்கு. பத்துக்கு எட்டு பொருத்தம் சரியா இருக்கு” என ஜோசியர் ஏசிட்டை ஊற்றிவிட்டார்.
இப்போது மகனிடம் இதைப் பேசினால் அவன் ஒரே வார்த்தையில் “வேண்டாம்” என்றுவிடுவான். ஆனாலும் முதல்முதலில் வந்த வரனை தட்டவும் மனமில்லை. பெண்ணை பார்க்கலாம் ராகவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம் என முடிவெடுத்தார்.
விசு கோதாவரியுடன் தன் ஜாலத்தைத் தொடங்கினார் . விசுவும் கோதாவரியும் ஹாலில் அமர்ந்தனர். ராகவன் தன் அறையில் லேப்டாப் முன்பு எதையோ துழாவிக் கொண்டிருந்தான். அவன் காதுக்கு தங்கள் பேச்சு சரியாகச் சென்று தொபகடீர் என விழும்படி பேசினார்கள்.
“கோதாவரி ராகவனுக்கு வரன் வந்திருக்கு. பொண்ணு வக்கீலாம்” விசு தொடங்கினார்.
“இப்ப என்ன அவசரம்?” இது கோதாவரி
“இல்ல நம்ம வரதராஜனுடைய தம்பி பொண்ணு அதான்” என இழுழுழுழுத்தார்.