“அய்யா...நான் முரளி”
“அடப் போப்பா!....உன்னை வேற பேர் சொல்லிக் கூப்பிடவே முடியலைப்பா...கொகுல் என்கிற பேர்தான் உனக்குப் பொருத்தம்” என்றார்.
“சரிங்க அய்யா...நீங்க சொன்னா சரி” என்றான் முரளி பவ்யமாய்.
“அப்புறம்...உன்னை இப்ப எதுக்குக் கூப்பிட்டேன்னா...” என்றவர், மேஜைக்குக் கீழே குனிந்து ஒரு சூட்கேஸை எடுத்து மேஜை மீது வைத்தார். அதன் லாக்கை மெல்ல நீக்கி, சூட்கேஸைத் திறந்தார்.
உள்ளே கட்டுக்கட்டாய் கரன்ஸி நோட்டுக்கள்.
“இதுல...முப்பது லட்சம் இருக்கு...பேங்க்ல கொண்டு போய் நம்ம கம்பெனி அக்கௌண்ட்ல போடணும்!...வழக்கமா இந்த வேலையை நான்தான் செய்வேன்...ஏன்னா?...இதுக்கு முன்னாடி இங்க வேலை பார்த்திட்டிருந்த ஒருத்தனை நம்பி ஒரு இருபது லட்சத்தைக் கம்பெனி அக்கௌண்ட்ல கட்டச் சொல்லிக் குடுத்தேன்.....ப்ராடுப் பயல் அப்படியே ஓடிட்டான்!...அதுக்கப்புறம் கடந்த ஏழு வருஷமா...பேங்க்குக்கு பணம் கட்ட நான் மட்டும்தான் போவேன்...யாரை நம்பியும் குடுக்க மாட்டேன்!...இப்ப உன்னை நம்பிக் குடுக்கறேன்!...போயிட்டு வா!” என்றபடி அந்த சூட்கேஸை அவனிடம் நீட்டினார்.
நெகிழ்ந்து போனான் முரளி.
“அய்யா...என்னைப் பற்றி உங்களுக்கு முழுசா தெரியாது!...நான் இந்தக் கோயமுத்தூருக்கு வந்தே கொஞ்ச நாள்தான் ஆச்சு!...அப்படியிருக்கும் போது நீங்க என்னை நம்பி இவ்வளவு பெரிய தொகையை....” தயக்கமாய் முரளி இழுக்க,
“தம்பி...நான் உன்னை இந்தா ஆபீஸ்ல வேலை பார்க்கற ஒரு பணியாளாகவே பார்க்கலை...என்னோட மகன் கோகுலாய்த்தான் உன்னைப் பார்க்கிறேன்!...அதனால்தான் நம்பிக் குடுக்கறேன்!”