தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 21 - முகில் தினகரன்
மாலை நாலு மணி வாக்கில்தான் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் முரளி.
“என்னப்பா...மணி நாலு ஆயிடுச்சு இன்னிக்கு?” ராக்கம்மா அவனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே கேட்டாள்.
“ஆமாம்மா...இன்னிக்கு நாலு லாரி ஒரே சமயத்துல வந்திடுச்சு...எல்லாம் ஃபுல் லோடு...!...அதையெல்லாம் இறக்க வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டு...வர்றதுக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு” என்றவாறே சாப்பிட ஆரம்பித்தவனுக்கு “கெக்...கெக்”கென்று விக்கலெடுக்க,
அவசரமாய் தண்ணீர் டம்ளரை எடுத்து நீட்டினாள் ராக்கம்மா. வாங்கிப் பருகியவன், “என் நண்பன் தனசேகர் எங்கிருந்தோ என்னை நினைக்கிறான்” என்றான் முரளி கண்களில் நீர் வழிய,
முரளிக்கு எதிரே திடீரென்று வந்து நின்று அவனுக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக, வீட்டின் பின் புற வாழை மரத்தருகே மறைந்து நின்றிருந்த தனசேகரின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழ, வாய் விட்டு அழுதான்.
அவன் முதுகில் தட்டி ஆறுதல் சொன்னார் தங்கவேலு.
“டேய் முரளி...நீதாண்டா எப்ப பார்த்தாலும்...“தனசேகர்...தனசேகர்”ன்னு புலம்பிக்கிட்டிருகே?...ஆனா உன் சிநேகிதகாரன் உன்னை சுத்தமாய் மறந்தே போயிட்டான்!...உன் மேல் உண்மையான அன்பிருந்திருந்தா இன்னேரம் உன்னைத் தேடி இங்க வந்திருக்கணும் அல்ல?” வேண்டுமென்றே மகனைச் சீண்டினாள் ராக்கம்மா.
“அப்படிச் சொல்லாதம்மா...இன்னேரம் அவன் என்னைக் கண்டுபிடிக்க படாதபாடு பட்டுக்கிட்டிருப்பான்!....நீ நம்பறியோ...நம்பலையோ...என் மனசு சொல்லுது...என்னிக்கோ ஒரு நாள் நிச்சயம்..அவன் நான் இருக்கும் இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு இங்க வருவான்!...திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு என்னை ஆச்சரியப்படுத்துவான்!...ஏன்னா...எங்க நட்பு அப்படிப்பட்டது” என்று முரளி சொல்ல,
வெலவெலத்துப் போனாள் ராக்கம்மா. “அடப்பாவி...எல்லாம் தெரிஞ்சது போலவே சொல்றானே?”