தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 14 - பிந்து வினோத்
மனோஜ் மஞ்சு திரும்பி வருவதற்காக எத்தனை ஆர்வத்துடன் இருக்கிறான் என்பது மஞ்சுவிற்கே தெரியும்... அதனால் துர்கா சொன்னதை அப்படியே சொன்னால் அவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது மஞ்சுவிற்கு புரிந்தது... துர்கா மீது அவன் கோபப் படும் வாய்ப்பு உண்டு...
ஆனால், துர்கா பேசியது எதுவுமே தவறென்று மஞ்சுவிற்கு தோன்றவில்லை... ஒரு நல்ல மேனேஜராக அவள் கூறிய அறிவுரைகள் மஞ்சுவின் நன்மைக்கு தான்... இப்போது அவசரப்பட்டு மஞ்சு முடிவெடுத்து விட்டு, பின்னர் வருத்தப் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொல்லப் பட்டது தான்...
இதை எல்லாம் மின்னல் வேகத்தில் யோசித்த மஞ்சு, முதல் முறையாக மனோஜிடம் அப்படியே உண்மையை ஒப்பிக்க வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தாள்...
திருமணத்திற்குப் பின் பலத் தடவை மனோஜ் விஷயங்களை சொல்லாமல் விட்டிருக்கிறான்... ஆனால் மஞ்சு அதை செய்தது இல்லை... இப்போதும் வேண்டுமென்றே அவள் அதை செய்யவில்லை... இந்த நேரத்தில் இது தான் சரி என்று அவளுக்கு தோன்றியது...
‘நிலைமைக்கு ஏற்ப பேசி சமாளிப்பதால் கணவன் மீதிருக்கும் அன்பு எந்த விதத்திலும் குறைந்துப் போய் விடாது...’ என்ற புதிய ஞானோதயம் பிறக்க,
“துர்கா புதுசா ஒன்னும் சொல்லலை மனோஜ்... எனக்கு தான் செகன்ட் தாட்ஸ் வந்திருக்கு...” என்றாள்.
“செகன்ட் தாட்ஸா???” என்ற மனோஜின் கேள்வியில் ஏமாற்றம் வழித்து ஓடியது...
“என்ன அதுக்குள்ளே உங்க குரல்ல அப்படி ஒரு சேன்ஜ்??? மை முசுட்டு மேனேஜர், உங்களை விட்டு தள்ளி இருக்க எனக்கு மட்டும் பிடிக்குமா??? ஆனால் இங்கே வந்தப்புறம் சில விஷயங்கள் மனசுல பட்டுச்சு...”
“என்ன விஷயம்???”