தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 27 - முகில் தினகரன்
மாலை மயங்கிய பின் வீடு திரும்பிய முரளி, “என்ன வசந்தி...இன்னுமா இந்தச் சொக்கு கண் திறக்கவில்லை?” கேட்டான்.
“ஆமாம்ண்ணா...இடையில் ஒரு தரம் புரண்டு படுத்தார் அப்பத்தான் அவர் கையில் இருந்த காயத்தைப் பார்த்தேன்...வழக்கம் போல கள்ளிப்பூட்டான் தழையைக் கசக்கி வைத்துக் கட்டிட்டேன்!” என்றாள் வசந்தி.
“பரவாயில்லை இப்படியே இருக்கட்டும்...எப்பக் கண் திறக்கிறாரோ அப்பவே போகட்டும்” என்றான் முரளி.
இரவு பத்தரை மணி வாக்கில் மெல்ல எழுந்த சொக்கு, கட்டிலில் அமர்ந்தவாறே சுற்றுப் புறத்தை நோட்டமிட்டான். கண்கள் சுருங்கின. “இது எந்த இடம்?” அவன் உதடுகள் முணுமுணுத்தன.
அந்த ஓசை கேட்டு வந்த முரளி, “என்ன சொக்கு...போதையெல்லாம் தெளிஞ்சுதா?” புன்னகையோடு கேட்டான்.
“நீ...முரளி...நீ எப்படி எங்க வீட்டுல?” சொக்கு கேட்க,
“ஆஹா...”என்று விழிகளை உயர்த்திய முரளி, “அய்யா...இது உங்க வீடு இல்லை!...எங்க வீடு!” என்றான்.
எழுந்து தரையில் நின்ற சொக்கு, “நான் எப்படி இங்கே?” கேட்டான்.
“அதை அப்புறம் சொல்றேன்...மொதல்ல வயித்துக்கு ஏதாச்சும் போடு...மணி பத்தரைக்கு மேலாயிடுச்சு!” என்ற முரளி, சமையலறைப் பக்கம் திரும்பி, “அம்மா...சொக்குவுக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வாம்மா” என்றான்.
தோசைப் பிளேட்டைக் கையிலெடுத்துக் கொண்டு வந்தாள் வசந்தி.