சொல்ல, இவனும் கையாட்டினான்.
வசந்தியின் பார்வையில் ஏதோ தெரிய அது இன்னதென்று புரியாமல் குழம்பினான்.
போகும் வழியில் முரளியிடம் கேட்டான், “முரளி...உனக்கு என் மேல் துளிக் கூட கோபமில்லையா?”
“எதுக்கு?”
“என்னப்பா?...உன் உயிருக்குயிரான நண்பன் தனசேகரைக் கத்தியால் குத்திய கெட்டவன் நான்”
“இல்லை...என் உயிர் நண்பனுக்கு ரத்தம் கொடுத்து அவனை எமனிடமிருந்து மீட்டுக் கொடுத்த நல்லவன் நீ” என்றான் முரளி.
“நான் குடிகாரன்!...”
“அறியாமையால் குடிக்கிறாய்...அறிந்து கொண்டால் நிறுத்தி விடுவாய்” சற்றும் விகல்பமில்லாமல் முரளி பேசுவது சொக்குவுக்கு மிகவும் வியப்பாயிருந்தது.
சொக்குவின் வீடு வந்ததும், அவனை இறக்கி விட்டு முரளி அப்போதுதான் கவனித்தான் கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. “என்ன சொக்கு...வீடு பூட்டியிருக்கு?”
“பின்னே?...இந்த வீட்டுல இருக்கறதே நான் ஒருத்தன்தான்...”
“உன்னோட அப்பா....அம்மா...?”
“அப்பன் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே போய்ச் சேர்ந்திட்டான்!..அம்மா மட்டும்தான்!... அவளும் என் கூட இருக்க முடியாம..தன்னோட அக்கா வீட்டுல போய் இருக்கா...” என்றான் சொக்கு. சொல்லும் போது இயல்பாய்ச் சொன்னாலும், அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் சோகம் ஒட்டியிருந்ததை முரளி உணர்ந்தான்.