எங்கே உட்காருவது என்று தெரியாமல் சொக்கு சுற்றும் முற்றும் பார்க்க, “அப்படியே கட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள் வசந்தி.
சொக்குவுக்கு அந்த அனுபவமே புதிதாயிருந்தது, அவனது வாழ்க்கையில் யாருமே அவனை இந்த அளவிற்கு மதித்து, வீட்டிற்குள் அனுமதித்து, உட்கார வைத்து, உண்ண உணவு கொடுத்ததேயில்லை. காரணம், அவ்வூர் மக்கள் மனதில் அவனைப் பற்றிப் பதிந்திருந்த அபிப்ராயம் வேறு மாதிரி. குடிகாரன், கோபக்காரன், ரவுடி, பொறுக்கி...இன்னும் பலப்பல.
ஒவ்வொரு கவளமும் உள்ளே போகப் போக கண்களில் கண்ணீர் பெருகியது.
அப்போது முழங்கையிலிருந்த அந்தச் சிராய்ப்பில் லேசாய் வலியெடுக்க, முகத்தைச் சுளித்தான்.
“காயம் ரொம்ப வலிக்குதா?” என்று வசந்தி கேட்டதும்தான் அந்த இடத்தைப் பார்த்தான். அப்போதுதான் தன் கையில் காயம் ஏற்பட்டிருப்பதே அவனுக்குத் தெரிந்தது.
“இந்தக் கட்டு....?”
“நான்தான் போட்டேன்” என்றாள் வசந்தி.
கண்ணீரால் நன்றி சொன்னான்.
சாப்பிட்டு முடித்தவன் கையைக் கழுவ சுற்றும் முற்றும் பார்க்க, “சும்மா அந்தப் பிளேட்டிலேயே கழுவுங்க” என்றாள் வசந்தி.
அவன் தயங்க, “அட சும்மா கழுவுங்க” என்றவள் அவனருகில் வந்து அவனைக் கழுவ வைத்து, கழுவியது அந்தப் பிளேட்டை சற்றும் கூச்சமில்லாமல் வாங்கிக் கொண்டு நகர,
அதிசயமாய்ப் பார்த்தான் சொக்கு. “உலகில் இந்த மாதிரி மனிதர்கள் கூட இருக்கிறார்களா?”