தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 30 - முகில் தினகரன்
காலை ஐந்து மணியிருக்கும்,
மெல்லக் கண் திறந்த வசந்தி எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சொக்குவைக் கண்டதும் “விருட்”டென எழுந்தாள். “சொக்கு...நீ எப்படி?”
கேட்டு விட்டு சுற்றும்முற்றும் பார்த்தவள் அது தன் வீடில்லை என்பதைப் புரிந்து கொண்டதும், தலையைச் சிலுப்பி, நினைவுகளைச் சீராக்கி, நேற்று நடந்தவைகளை நினைவு கூர்ந்தாள்.
“அந்த ரெண்டு பேர்?” அவள் சன்னக் குரலில் கேட்க,
“பயப்படாதே...நான் அவங்களை அங்கேயே அடிச்சுப் போட்டுட்டு...உன்னைக் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்திட்டேன்!...இது என் வீடுதான்” என்றான் சொக்கு.
“அப்படியென்றால் என்னைக் காப்பாற்றிய அந்த உருவம் சொக்குவா?” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள், “நீயும் அங்கே சாராயம் குடிக்க வந்திருந்தாயா?” கேட்டாள்.
அவன் தலை குனிந்தபடியே “ஆமாம்”என்றான்.
சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்தவள், “என்ன சொக்கு...தப்புப் பண்ணிட்டியே” என்று சொல்ல, சொக்கு அதிர்ந்தான்.
“என்னம்மா?...என்ன சொல்றே?...நான் உன்னைக் காப்பாத்தியது தப்பா?”
“காப்பாத்தியது தப்பில்லை!...காப்பாத்தியதும்...அப்படியே எங்க வீட்டுல கொண்டு போய் விட்டிருந்தேன்னா...எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும்!...நீ பாட்டுக்கு இங்க உன் வீட்டுல கொண்டாந்து போட்டுட்டே...நானும் ஒரு ராத்திரி முழுக்க உன் வீட்டுல உன் கூட இருந்திருக்கேன்...இதை ஊர் என்ன பேசும்?...நாளைக்கு எனக்கு எப்படி கல்யாணம் காட்சி நடக்கும்?...ஹும்...நல்ல மனுஷனா இருந்திருந்தா இதையெல்லாம் உன் மூளை யோசிச்சிருக்கும்...நீ குடிகாரன்...அந்த அளவுக்கு யோசிக்கவா முடியும்?” சற்றுக் கோபமாகவே பேசினாள் அவள்.