தன்னைக் காப்பாற்றியதையும், தான் மயக்கத்தில் இருந்ததால் தன்னை அவன் வீட்டிற்குத் தூக்கிட்டுப் போய் படுக்க வைத்ததையும், தெளிவாய்ச் சொன்னாள்.
முரளி சொக்குவை நன்றியுடன் பார்க்க,
“நீங்க எனக்கு உதவும் போது...நான் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்றான் அவன்.
பொதுவாகவே, எல்லா விஷயங்களும் நல்ல விதமாகவே நடந்து கொண்டிருந்தால் சிலருக்கு அது பொறுக்காது, வேண்டுமென்றே ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பி குளிர் காய்வர். இந்தக் கூட்டத்திலும் சிலர் அதுபோல் இருக்க,
“ஹும்...ஒரு ராத்திரி முழுவதும் வயசுப்பொண்ணு...அதுவும் மயக்கத்தில் இருக்கும் போது....அதை இவன் சும்மா விட்டு வைத்திருப்பானா?” ஒரு குரல் எழுந்தது.
அதைக் கேட்டதும் தலையிலடித்துக் கொண்டு அழுதாள் ராக்கம்மா.
“சொக்கு ஏற்கனவே குடிகாரன்...ரவுடி...அவனை நல்லவன் என்று யாராவது நினைக்க முடியுமா?”
“பஞ்சும் நெருப்பும்...பக்கத்தில் வெச்சா...பத்திக் கொள்ளுமே” யாரோ பாடினார்கள்.
முரளியே அதிர்ந்து போனான். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனான்.
அப்போது,
திடீரென்று சொக்கு பேசினான், “முரளி...இப்படியொரு பேச்சு...ஊருக்குள்ளார வரும்!னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை!...என்னை மன்னிச்சிடு முரளி!”
“நீ ஆம்பளைப்பா...ஒரே வார்த்தைல “மன்னிச்சிடு”ன்னு சொல்லிட்டுப் போயிடுவே?...அந்தப் பொண்ணு எதிர்காலம்...என்னாகறது?” ராக்கம்மா கூவினாள்.