இல்லை... அவங்களுக்கு நீங்க உங்க அம்மா அப்பா கூடவோ தங்கையோடவோ அன்பா இருப்பது பிடிக்கலை... உங்க வீட்டு வேலைக்காரியிடம் பேசினேன்... எப்போதும் இந்திரா உங்களை துளைச்சு துளைச்சு கேள்வி கேட்பதை பத்தி சொன்னாங்க... அம்மா அப்பா கூட நீங்க பேசினால் கூட அவங்களுக்கு கோபம் வரும்..." என்று விளக்கம் கொடுத்த தென்றல்வாணனின் பேச்சில் குறுக்கிட்டார் ரமணி.
"போதும் இன்ஸ்பெக்டர், நிறுத்துங்க... உங்களுக்கு அவனை அரெஸ்ட் செய்யும் அளவுக்கு எந்த சாட்சியாவது இருந்தால் சொல்லுங்க, இல்லைன்னா நாங்க கிளம்புறோம்... " என்று சொல்லி விட்டு எழுந்த ரமணி, மகனின் கையைப் பற்றி இழுத்துச் செல்ல முயன்றார்.
"முத்துக்குமார் மேல மட்டும் இல்லை, உங்க மேலயும் குற்றம் சாட்ட வேண்டிய அளவு சாட்சி என்கிட்டே இருக்கு! ஆனால் இந்த கொலையில் நீங்க இன்வால்வ் ஆகலைன்னு எனக்கு தெரியும்... உங்க மகன் கூடவே நீங்களும் ஜெயிலுக்கு போக ஆசைபட்டால் அவரை அழைச்சிட்டு கிளம்புங்க... வீட்டுல உங்க மகனே ரிப்பேர் செய்து வச்சிருக்க செக்யூரிட்டி கேமரா தொடங்கி, அவரோட மொபைல் போன்ல எங்கே இருந்து கால் வந்துச்சு என்பது வரை எல்லாமே எங்களுக்கு தெரியும்..." என்றான் தென்றல்வாணன் அதிகாரத்துடன்.
அப்பாவுடன் செல்ல ஒரு அடி எடுத்து வைத்திருந்த முத்துக்குமார், சட்டென்று நின்றான்!
"முத்து, இன்ஸ்பெக்டர் உன்னை டிரிக் செய்ய முயற்சிக்கிறார்! வேண்டாம்..." என்று மீண்டும் மகனை பதற்றத்துடன் எச்சரித்தார் ரமணி.
அபினவும் மனதில் ஓடிய சந்தேகங்களுடன் அமர்ந்திருந்தான். முத்துக்குமார் வீட்டு செக்யூரிட்டி கேமரா அதுவே ரிப்பேர் ஆனதா, யாராவது ரிப்பேர் ஆக்கினார்களா என்று தொழில் நுட்பம் தெரிந்தவர்களால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
அதேப்போல முத்துக்குமார் வீட்டிற்கும் சரி, அவன் ஜாகிங் சென்ற க்ரவுன்டிற்கும் சரி, பொதுவாக ஒரே ஒரு மொபைல் டவர் தான் இருந்தது. அதனால் எந்த இடத்தில் இருந்து துல்லியமாக மொபைல் அழைப்பை முத்துக்குமார் ஏற்றான் என்பதை கண்டுப்பிடிக்க வழியே இல்லை என்று மொபைல் நிபுணர்களும் சொல்லி இருந்தார்கள்!