"ஓ! அதனால தான் முத்துகுமார் ஜமாலை கட்டாயப் படுத்தி ஜாகிங் வர சொல்லி இருக்கான் போல?" என்று சத்யா விடாது அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
"ஆமாம்... முத்துக்குமாரோட ப்ளானுக்கு ஜமால் ரொம்ப முக்கியம்... அவங்க ஜாகிங் செய்தப் போது இந்திரா உயிரோடு இருந்ததா காட்ட முத்துக்குமார் போட்டிருந்த ப்ளான் அது. ஆனால் அதுவே தான் அவனை காட்டிக் கொடுக்கவும் உதவிச்சு..."
"எப்படி?"
"கால்ல ஸ்ட்ரெயின் இருக்கும் போது அப்படி கட்டாயமா ஜாகிங் போக வேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஃபிரென்ட் வரலைன்னு சொல்லும் போது, நமக்கும் கால்ல அடி தானேன்னு விடாமல், கம்பல் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு? வேற ஏதோ காரணம் இருக்கனும்னு தோணிச்சு... உண்மையில் முத்துகுமாருக்கு கால்ல ஸ்ட்ரெயின் எல்லாம் இல்லை"
"என்ன?"
"ஆமாம்! இந்திராவை கொலை செய்தபோது, அவன் ப்ளான்ல இல்லாத விதமா அவனோட ஸ்போர்ட்ஸ் ஷூவிலும் ரத்தம் பட்டிருச்சு... அதனால வேற வழி இல்லாமல் அதையும் அவன் அங்கேயே விட்டு வைக்க வேண்டியதாகிடுச்சு... அதனால் ஜாகிங் போக நல்ல பார்மல் ஷூவை அவன் போட வேண்டியதா போச்சு..."
"ஓ! உங்களுக்கு எப்போ முத்துக்குமார் மேல சந்தேகம் வந்துச்சு? அவர் டிவியில பேசினதை பார்த்து எனக்கு பாவமா இருந்துச்சு..."
"அபினவும் இதையே தான் சொன்னான். உண்மையாவே முத்துக்குமார் பாவம் தான் சத்யா... அதிக பாசத்திற்காக அவன் கொடுத்த விலை இது! கொலை நடந்த அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு முத்துக்குமார் முதல்ல சொன்னதை கேட்டபோதே எனக்கு அவன் மேலே சந்தேகம் வந்திடுச்சு!"