கொடுத்துட்டான்... ஆனாலும், பாவம் சத்யா அந்த முத்துக்குமார்... எனக்கு பட்டுகோட்டை பாட்டு தான் ஞாபகம் வருது...
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் – அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
எவ்வளவு சரியா சொல்லி இருக்கார்! நல்ல அழகான அன்பான குடும்பம்... அந்த பொண்ணு இந்திராவும் கூட அன்பானவள் தான். ஆனால் அந்த அன்பு அதிகமாகி என்ன நிலைமைக்கு கொண்டு வந்திருச்சு பார்த்தீயா? அவள் வாழ்க்கையும் முடிஞ்சு போய், அந்த முத்துக்குமாரோட வாழ்வும் அழிஞ்சு போச்சு... அவனோட அம்மா அப்பாவும் பாவம்..."
"எல்லோருமே பாவம் தான்... எனக்கு இதை சொல்லுங்க, அந்த முத்துக்குமாருக்கு இந்திரா போன் செய்தது உண்மையில்லையா? அவன் போன்ல கால் ரெகார்ட் இருந்ததா சொன்னீங்களே...???"
மாணவி போல ஆர்வத்துடன் கேட்ட மனைவியிடம் விபரம் சொல்ல மாட்டேன் என்று சொல்ல தேனிற்கு மனம் வரவில்லை. அதனால் இப்போதும் மேலோட்டமாக விபரம் சொன்னான்.
"முத்துக்குமார் கொலை செய்துட்டு, இந்திரா போனை எடுத்து தன்னோட போனுக்கு கால் செய்திருக்கான்... நாங்க மொபைல் கம்பெனி வழியா கால் வந்த டவரை ட்ராக் செய்தாச்சு... இரண்டு போனிற்கும் ஒரே டவரில் இருந்து தான் சிக்னல் கிடைச்சிருக்கு. ஜமால் எப்படியும் குத்துமதிப்பா தான் நேரம் சொல்வான்னு முத்துக்குமார் கெஸ் செய்திருக்கான்... அதனால போன் செய்துட்டு உடனே வீட்டுல இருந்து கிளம்பி இருக்கான். ஜாக் செய்யும் போது சும்மா போன் வந்ததா ஆக்ட் செய்து எடுத்து பேசி இருக்கான்..."
அவ்வளவு தகவலை சொன்ன தென்றல்வாணன், முத்துகுமார் வீட்டிற்கும் க்ரவுன்டிற்கும் ஒரே மொபைல் டவர் தான் என்பதை வேண்டுமென்றே மனைவியிடம் சொல்லாமல் விட்டான். அவன் பொய் சொல்லி முத்துக்குமாரை குற்றத்தை ஒத்துக் கொள்ள வைத்தான் என்பது சத்யாவிற்கு தெரிவதை அவன் விரும்பவில்லை!