கார்த்திக் ஒரு ஏக்க பார்வை வீசி விட்டு “கொடுத்து வைத்தவன்..” என்று விட்டு “ஏய், என்னை தான தேடிக்கிட்டு இருந்த” என்றான் குறுகுறுக்கும் பார்வை வீசி. “நினைப்பு தான் புழப்பை கெடுத்துச்சாம்...அர்விந்த் நித்தி, நிக்கியை பாக்கணும் சொன்னான். அவங்கள தான் தேடினேன்.” என்றாள் சந்தியா.
அவள் சொல்வதை நம்பாத கார்த்திக்,
“யு ஆர் அன் ஆசம் லையர்” என ,
“யு ஆர் அன் ஆசம் அங்கிரி பர்ட் “ என சந்தியா பதிலுக்கு சொல்லி விட்டு “அது என்ன இஷ்டமிருந்த வான்னு சொல்றது? அப்படி புஸ்...புஸ்....ன்னு கோபம் வருது கார்த்திக் உங்களுக்கு?”
“ம்...பின்ன இப்படி கும்ன்னு வந்திருக்க. எவ்வளவு நேரம் தான் லாங் ஷாட் ல பாக்கிறது. க்ளோஸ் அப்ல பாக்க முடியாம போயிடுமோன்னு பயம் தான். யு லுக் ப்ரிட்டி அண்ட் டேம் ஹாட்” என்றான் அவளை பார்வையால் அங்குலம் அங்குலமாக அளந்த படி. பூமா பிறந்த நாள் பரிசாக அனுப்பிருந்த காபி நிறத்தில் நீள பாவாடையும், தந்த நிறத்தில் லேசான வேலைப்பாடுகள் கொண்ட சட்டையும் அணிந்திருந்த அவளின் அழகு எடுப்பாக தெரிய எப்போதும் அவள் முகத்தில் மட்டுமே நிலைத்திருக்கும் அவன் பார்வை முதல் முறையாக அவளை மேலும் கீழுமாக சல்லடை போட்டது.
அவனை சொடுக்கு போட்டு அழைத்தவள் “இங்க என்ன குறுக்கெழுத்து போட்டியா நடக்குது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்ன்னு லுக்கு விட்டுகிட்டு இருக்கீங்க. எங்க வீட்டு பக்கத்தில அறுபது வயசு கிழவன் கூட இப்படி தான் சைட் அடிப்பார். இதுக்கெல்லாம் இந்த சந்தியா அசர மாட்டா. டைம் ஆச்சு. அக்கா தேடுவா நான் போறேன்” என்றவளிடம், “சோ..என்னை பாக்க வந்த. வந்த வேளை முடிஞ்சிடுச்சு. அதான் கிளம்பற” என்றான் கார்த்திக்.
அப்போது சௌபர்ணிகா “சந்தியா, எப்படி இருக்க?” என கேட்டபடி அங்கே வர “ஆண்டி, நான் நல்லாயிருக்கேன். ஆனா நீங்க எப்படி ஆண்ட்டி அப்படியே இருக்கீங்க. யங்கா! சான்ஸ்சே இல்ல“ என்றாள். புன்முறுவல் பூத்த சௌபர்ணிகா “காதி உன்னை கோபத்தில அறைந்ததா சொன்னான்.”
என மேல பேச வந்த அவரை “பழச பேசமா..சியர் அப் அண்ட் பி ஹாப்பி ஆன்ட்டி. எனக்கு இன்னைக்கு பர்த் டே. உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் எனக்கு கண்டிப்பா தேவை” என லேசாக குனிந்து அவரது கால்களை தொட முயன்ற சந்தியாவை “நீ நல்லாயிருப்ப சந்தியா. இதுக்கு ஏன் கால்ல விழுந்து என்ன பெரிய ஆளாக்கிற. உன்னை வீட்டில நல்லா ஒழுக்கமா வளத்திருக்காங்க. “ என்றவர் கார்த்திகிடம் திரும்பினார்.
அங்கு நடந்தவற்றை பார்த்து வாயடைத்து போன கார்த்திக், சௌபர்ணிகாவிடம் நல்ல பேர் வாங்கும் சந்தியா மீது பொறாமை ஏற்பட்டது. “சந்தியா ரெம்ப அடக்கமான பொண்ணு காதி. இன்னைக்கு பண்ண தப்ப இனி பண்ணாத” என்றார் அவனிடம்.
“அடக்கமான பொண்ணா...தம்மடிப்பேன் சொன்னாளே” என, சௌபர்ணிகா அதிர்ச்சியாக சந்தியாவை பார்க்க,
“சும்மா..கார்த்திக் என்னை ஹனி ஹனி ன்னு கூப்பிட்டாரு...அதான் அப்படி சொன்னேன்” என சந்தியா சொல்ல,
கார்த்திக்கிடம் திரும்பிய சௌபர்ணிகாவிடம் “அவ மட்டும் சும்மாவா...உங்களுக்கு சொர்ணாக்கான்னு பேரு வச்சிருக்கா” என சொல்ல,
“கார்த்திக் பொய் சொல்றார் ஆண்ட்டி” என்ற சந்தியாவிடம் சௌபர்ணிகா, “காதி என்கிட்ட பொய் பேச மாட்டான்” என அவனுக்கு ஆதரவாக பேச, சந்தியா என்ன சொல்லவென தெரியாமல் நிற்க, சௌபர்ணிகாவே தொடர்ந்தார்.
கார்த்திக்கிடம் “சந்தியா ரெம்ப நல்ல பொண்ணு காதி. அவளை தப்பா பேசாத” என கண்டிப்போடு சொன்னார். அவர் கார்த்திக் பக்கம் திரும்பி சொல்லும் போது அவருக்கு தெரியாமல் அவனுக்கு சந்தியா அழகு காண்பிக்க,
அதை பார்த்த கார்த்திக், அவள் முன் தன்னை அம்மா கண்டிப்பதை விரும்பாமல்,“ம்.....மம்மி மின்னுவதெல்லாம் பொன்னல்ல...என்னை நம்புங்க” என,
சந்தியா “அப்போ...என்னை நம்ப வேண்டாம்ன்னு ஆண்ட்டிகிட்ட சாடை மாடையா சொல்றீங்களா கார்த்திக்” என்றாள் கார்த்திக்கை பார்த்து.
“அது தான உண்மை. “ என்றான் கார்த்திக்.
“ஆண்ட்டி, இப்படி தான் காலையில இருந்து உங்க காதி என்னை ஹர்ட் பண்ணிட்டே இருக்காரு. உங்களுக்காக தான் நான் பொறுமையா இருக்கேன்” என்றாள் சந்தியா சௌபர்ணிகாவிடம்.
“மம்மி, இவ பொறுமையா??....காலையிலே இருந்து என்ன வேலையெல்லாம் செய்து வைச்சா தெரியுமா ” என சௌபர்ணிகாவிடம் முறையிட, இவர்கள் சண்டை போடுவதை எப்படி தீர்க்க என ஒரு நொடி திணறிய அவர், “பேச்சை விடு காதி, நீ வா சந்தியா” என சந்தியாவை அழைத்து சொல்ல நமுட்டு சிரிப்புடன் கார்த்திக்கிற்கு அழகு காட்டி அவருடன் சென்றாள் சந்தியா.
“உன் திமிரையும் இந்த குறும்பையும் அடக்குறேன் சந்தியா” மனதிற்குள் கங்கணம் கட்டினான்.
உள்ளே சென்ற அவளை ஆர்வமாய் அனைவரும் விசாரிக்க, அவள் பேச பேச அந்த இடம் சிரிப்பலையுடன் களைகட்டியது. அந்த கூட்டத்தில் இருந்த மதுவும் அதை ரசித்துக் கொண்டிருந்தாள். சூர்யாவின் முழுப்பெயர் ‘சூர்ய ப்ரகாஷ் என அறிந்ததும், “ஓ....நீங்க தான் நியூஸ்ல வந்த டாக்டர் ப்ரகாஷா? சொல்லவே இல்ல. அப்ப நீங்களும் கார்த்திக் மாதிரி போட்டோக்ராபில கலக்குவீங்களோ?” என அந்த குடும்பத்தில் ஒவ்வொருத்தர் பெயரையும் அகழ்வாராய்ச்சி செய்து சிரிப்பூட்டிக் கொண்டிருக்க, சதாசிவம் கேட்டார், “அப்ப என் பேருக்கு என்ன சொல்லுவ”. “சதா மேடம் இப்போ படம் நிறைய பண்றது இல்ல. இன்னும் ஏன் அவங்க பேரை யூஸ் பண்றீங்க. உங்க பேர்ல ஒரு ‘மந்த்’தை நுழைத்தீங்கன்னா, ‘சமந்தாசிவம்’ ஆகிடும். இப்போ சமந்தா தான் டாப் ஹீரோயின். அப்புறம் என்ன …..அத்தனை இளவட்ட பசங்களும் உங்களுக்கு கோவில் கட்டினா கூட ஆச்சர்ய படுறதுக்கு இல்ல” என்று சொல்ல மீண்டும் சிரிப்பலை... உள்ளே சென்றதும் நித்தியையும் நிக்கியையும் பார்த்து அர்விந்த் விளையாட, அவன் மீது ஒரு பார்வை செலுத்தியவாறு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். “அப்போ காதிக்கு என்ன சொல்லுவ” என மீரா கேட்க, “கார்த்திக் ன்னா புள்ளி ராஜா, காதின்னா புள்ளியில்லாத ராஜா” என கார்த்திக்கை பார்த்து சொல்லிவிட்டு “புள்ளி ராஜாக்கு கோபம் வருமா?” என “புள்ளி ராஜாக்கு AIDS வருமா” பாணியில் அவனை பார்த்து கேட்டாள்.
சற்று நேரத்தில் விந்தியாவும், ஸ்ரீயும் அங்கு வந்து சேர, கார்த்திக் “எல்லாரும் வந்தாச்சு... லெட் அஸ் ஸ்டார்ட்..” என விளக்குளை அணைத்து விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்த நாள் பாட்டு பாட, அவள் முன் வைக்க பட்டிருந்த பிறந்த நாள் கேக்கில் இருந்த இருபத்தி மூன்று மெழுகுவர்த்தியின் ஒளியில் மிளிர்ந்த கார்த்திக்கின் முகத்தை வியப்புடன் பார்க்க, அவனோ சட்டென கண்சிமிட்ட அதை வேறு யாரும் பார்த்து விட்டார்களோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாள். முதலில் வெட்டிய கேக்கை சௌபர்ணிகாவுக்கு அளித்து தனது பனிக்கட்டியில் அவரை உறைய வைத்தாள். அவள் அருகில் நின்ற மீராவிடம் “ இன்னைக்கு உங்க அம்மா அப்பாவுக்கு வெட்டிங் அனிவேர்சரின்னு சொல்லிட்டு எனக்கு பர்த் டே கொண்டாடுறீங்க “என கேட்க, “அத அப்போவே முடிச்சாச்சு, உனக்காக தான் நாங்க வெயிட்டிங். உங்க சொர்ணாக்காவே அப்ரூவ் பண்ண சர்ப்ரைஸ் பார்ட்டி..” என இரகசியமாக மீரா சொல்ல “தேங்க்ஸ்...மீரா” என நன்றி சொன்னவளிடம் “உன் தேங்க்ஸ்சை காதிக்கு சொல்லு. அப்புறம் என்னை மரியாதையா அக்கான்னு கூப்பிடு” என செல்ல கட்டளையிட, “உங்க ஹஸ்பன்ட்க்கே மரியாதை இல்ல. உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல். சொல்ல வேண்டிய அவசியம் ஒரு வேளை வந்துச்சுன்னா அப்ப சொல்லிக்கிறேன். நீங்க என் பிரண்ட். உங்களை பேர் சொல்லி தான் கூப்பிடுவேன்“ என கேக்கை அவள் கையில் கொடுத்து “ப்ரண்ட்ஸ்” என்று சொன்னாள்.
“சூர்யா, நீ வித்தியாசமான பொண்ணுன்னு சொன்னது ரெம்ப சரி. ஆனா அநியாயத்துக்கு எங்க காதிய சாச்சுபுட்ட.” என சொல்ல அவள் கண்கள் அவனை தேட, அதற்காக காத்து கொண்டிருப்பவன் போல அவளை அழைத்தான்.
அங்கு கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருந்த சதாசிவம் ஆசையாய் சந்தியாவிடம் பேசினார். தனது நோயை பற்றியும் தன்னால் இன்னும் வெகு சில ஆண்டுகளே தாக்கு பிடிக்க முடியும் என்றும் சொன்னார். கார்த்திக்கிற்கு சீக்கிரம் மணமுடித்து தனது ஆயுசுக்குள் பேர பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருப்பதாக சொன்ன அவரிடம் “இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் அங்கிள் அதே ஓல்ட் டையலாக்கை சொல்லுவீங்க. இப்போவே கார்த்திக் பிஸி. இதுல கல்யாணம் பண்ணா, இன்னும் அதிகமா பொறுப்பு வரும். உங்களோட இருக்கும் நேரம் குறையும். உங்க மருமக உங்களை நல்லா பாத்துகிட்டாலும் உங்க ஆசை படி பேர பிள்ளைங்கள பெத்து வளக்கிறது சும்மாவா..உங்களுக்காகன்னு நேரம் செலவழிக்கிறது கஷ்டமாகிடும்ல .... அன்பும் அரவணைப்பும் யார் கொடுத்தா என்ன..? சுயநலமில்லாம கிடைச்சா போதுங்கிறது என்னோட எக்ஸ்பீரியன்ஸ். எனக்கு மனசு கஷ்டமா இருக்கிறப்ப அன்பு இல்லத்துக்கு போயிடுவேன். அங்க நிறைய குட்டி பசங்க இருக்காங்க. அவுங்க காட்டுற பாசத்தில என் கஷ்டமெல்லாம் ஓடி போயிடும். உங்களுக்கு நேரம் கிடைக்கிறப்போ அங்க வாங்க. அவங்கள உங்க பேர பிள்ளைங்கன்னு நினச்சு பழகி பாருங்க. அவங்களுக்கும் தாத்தா கிடச்ச மாதிரியும் இருக்கும், உங்களுக்கும் மனசுக்கு இதமா இருக்கும். எனக்காக ஒரு நாள் அப்படி ட்ரை பண்ணுங்களேன் ப்ளீஸ்” என்று அவரின் ஒப்புதலையும் வாங்கினாள்.
அவர்கள் அருகில் வந்த விந்தியா, “மணி எட்டு. கிளம்புவோமா” என சந்தியாவிடம் கேட்க, கார்த்திக், “ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா? நானும் அண்ணியும் பாட போறோம். எங்க பாட்டை கேட்டா நீங்களே ஆட்டோமெடிக்கா ஓடிடுவீங்க” என்று சொல்லி விட்டு மீராவை பாட அழைத்தான். அவர்கள் பாட தயாராக விந்தியாவிடம் ஒரு கோரிக்கையை விடுத்த சந்தியா, அவள் கையில் இருந்த அரவிந்தை வாங்கி கொண்டாள்.
மீராவும் கார்த்திக்கும் சேர்ந்து முதலில் “பார்த்த முதல் நாளில் “ பாட்டை பாடினர். பின், மீரா “அலைபாயுதே கண்ணா” பாட, பின் “காதலின் தீபம் ஒன்று “ பாட்டை கார்த்திக் தனியாக பாடி நிறைவு செய்தான்.
அவன் பாடியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. சந்தியா மட்டும் விதி விலக்கா... அர்விந்த் “சித்தி, உச்சி வருது” என பலமுறை கூப்பிட்டும் அதை கவனிக்காமல் பாட்டில் லயித்தாள். கார்த்திக் அவளை தனது வலையில் சிக்க வைக்க செய்த முயற்சி தான் என்றாலும், அவனை அறியாமல் அவனுள் கலந்திருந்த காதல் உணர்ச்சிபூர்வமாக பாட வைத்தது. அவன் பாடி முடித்ததும் அந்த தாக்கத்திலே காதலுடன் சந்தியாவை பார்க்க, அவளோ அந்த நேரம் தன் உடையில் ஈரம் தட்டு பட்டதை உணர்ந்தவளாய், “ஏய், படவா... என்ன வேலை செய்து வச்சிருக்க” என அர்விந்த்தை லேசாக கிள்ளி திட்டிக் கொண்டிருந்தாள். கார்த்திக்கோ தன்னை தான் மறைமுகமாக ஏசுகிறாள் என எண்ணி குமுறினான்.
அனைவரிடமும் விடைபெற்று விந்தியாவும், ஸ்ரீயும் இரு குழந்தைகளை கூட்டி கொண்டு விந்தியாவின் ஸ்கூட்டியில் முன்னே சென்று விட, சந்தியா அரவிந்துடன் கிளம்பும் போது அவளின் ஸ்கூட்டி பங்க்சர் ஆகி இருந்தது தெரிந்தது . இது கார்த்திக் வேலை என்று நினைக்கும் போதே அவனிடம் இருந்து “ஹாவ் பன்” என sms வந்தது. எரிச்சலுடன் ஆட்டோ பார்க்கலாம் என நினைத்த போது, கார்த்திக் கார் வந்து நிற்க, சந்தியா வர மறுக்க, “ஆட்டோல போனாலும் கூட வருவேன்” என அவன் சொல்ல, தொல்லை தாங்காமல் காரில் ஏறினாள். காரின் பின்னிருக்கையில் அரவிந்தோடு அமர்ந்த அவள், ஹெட்போன் மாட்டிக் கொண்டு, கார்த்திக்கை கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் அவளின் அலட்சியம் இன்னும் கடுப்பேற்றியது. அவன் திட்டம் நிறைவேறும் வரை பொறுமை காக்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டான்.
அவள் வீட்டிற்க்கு அருகில் அவளை இறக்கி விட்டவன், “ நாளைக்கு சிக்மா கிளையன்ட் கால்க்கு தேவையான டீடைல்ஸ் ஈமெயில் பண்ணிருக்கேன். டைம் இருந்தா பாரு.“ என்றான்.
“அதெல்லாம் முடியாது. ஆபிஸ் டைம்ல மட்டும் தான் ஆபிஸ் ஒர்க்.” என்றாள் சந்தியா. “நீ இப்படி சொல்லுவன்னு தெரியும். எப்பவும் லாஸ்ட் மினிட் வரைக்கும் வெயிட் பண்ண கூடாது. அப்புறம் உன் இஷ்டம். நான் கிளம்புறேன். இன்னைக்கு காலேல சீக்கிரம் எழுந்ததுனால ரெம்ப டையர்டா இருக்கு. மிட் நைட்ல நீ முழு வீச்சில இருக்கிறப்ப எனக்கு கால் பண்ணிடாத ப்ளீஸ்” என்றான் கெஞ்சலான குரலில்.
அவனிடம் விடைபெற்று அரவிந்த்தை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வரும் போது ஸ்ரீயிடம் லக்ஷ்மி பேசிக் கொண்டிருந்தது அவளின் காதில் விழுந்தது. “அப்பா போன் பண்ணாங்க. நம்ம பாண்டியனுக்கு சந்தியாவை முடிக்கலாமான்னு யோசிக்கிறாரு. அவன் சென்னைல தான் ஏதோ பெரிய கம்பெனில வேலை பாக்கிறானாம். உன் மாப்பிள்ளைட்ட சொல்லி விசாரிக்க சொல்லணும்னு சொன்னார். வீட்டிக்கு வர லேட்டாகும், மத்ததை நேர்ல வந்து சொல்றேன்னு போனை வச்சிட்டாரு” என்றார்.
மீராவின் குடும்பத்தினர் அன்று இரவு சதாசிவம் வீட்டில் தங்கி விட்டு அடுத்த நாள் கிளம்புவதாக முடிவெடுத்தனர். மீராவை தனியாக அழைத்த சௌபர்ணிகா, “இன்னைக்கு கார்த்திக், அந்த பொண்ணு சந்தியாவை அத்தனை பேரு முன்னாடி கைய நீட்டுனதுனால என்னல்லாம் நடந்தது தெரியுமா?. அந்த ஹாஸ்பிட்டல் சீப் டாக்டரோட வைப் எனக்கு நல்ல பழக்கம். காலையில லயன்ஸ் க்ளப் மீட்டிங் போனப்போ உங்க பயனுக்கு ஏதாவது ப்ரிச்சனையா? எங்க அண்ணா பெரிய சைக்காட்ரிஸ்ட். உங்களுக்கு இன்டெரஸ்ட்ன்னா அவரோட டீடைல்ஸ் கொடுக்கிறேன்னு சொன்னா. எனக்கு தூக்கி வாரி போட்டது. இன்னும் இந்த விஷயத்தை பலரும் பலவிதமா திரிச்சி பேசுறதுக்குள்ள, கார்த்திக்கிற்கு சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டேன்.”
மீரா யோசனையுடன் “ மது ?”
“இத்தனை நாளும் மதுக்காக தான் அவன் கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டு இருந்தேன். இனிமேலும் அப்படி முடியாது. அவனக்கு கல்யாணத்தை முடிச்சா மதுவும் மனசு மாற நிறைய வாய்ப்பு இருக்கு. நான் எப்படி இந்த வீட்டிக்கு மூத்த மருமகளா வந்து இந்த குடும்பத்தை பொறுப்பா நடத்துறேன்னோ, அதே பொறுப்பை உன்கிட்டயும் பார்க்கிறேன் மீரா. உங்க வீட்டிலே கார்த்திக்கிற்கும் பெண் எடுக்க ஆசை. அதான் உங்க அபியை அவனுக்கு கேட்கலாமான்னு பார்க்கிறேன். நீ என்ன நினைக்கிற? ”என்றார் மீராவிடம்.
மீரா என்ன சொல்வதென்று தெரியாமல், “முதல்ல கார்த்திக் மனசுல யாராவது இருக்காங்களான்னு கேட்டுட்டு முடிவு பண்ணலாமே அத்தை” என்றாள் யோசனையுடன்.
சௌபர்ணிகா அதற்கு “யாராவதுன்னா …..இன்னைக்கு வந்த சந்தியாவா?” என கேட்க மீரா திகைத்தாள்.
இப்படியாக கார்த்திக்-சந்தியா இவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் நாள் முடியும் தருவாயில், இருவரது குடும்பத்திலும் வெவ்வேறு வாழ்க்கையை நிர்ணயிக்க எடுக்கும் முடிவை இவர்கள் எப்படி எதிர் கொள்ள போகிறார்கள்?
…..அடுத்த ஆட்டத்தில்...
ஆட்டம் தொடரும் ...
{kunena_discuss:610}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.