தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 11 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
விக்னேஷ்வரன் அழைத்துச் சென்ற அறையில் சில உடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. தென்றல்வாணனும், வினோதனும் அறைக்குள் நுழையும் போதே விக்னேஷ் அவசரமாக அவற்றை எடுத்து ஓரமாக வைத்தான்.
சிறிய அறை என்றாலும் மற்றப்படி துப்புரவாக இருந்தது. அரை ஓரம் இருந்த டேபிளில் லேப்டாப் ஒன்று திறந்து இருந்தது. மேஜை அருகே ஒரே ஒரு சேர் இருந்தது. அதை தவிர ஒரு பழைய கட்டில் அறையை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது.
“இன்னொரு சேர் எடுத்துட்டு வரவா சார்?” என இரண்டு போலீஸ்காரர்களையும் பார்த்து பொதுவாக கலக்கத்துடன் கேட்டான் விக்னேஷ்வரன்.
“வேண்டாம், நாங்க இங்கேயே உட்காருறோம். நீங்க சேர்ல வசதியா உட்காருங்க!” என சொன்ன வினோதன் கட்டிலில் அமர்ந்தான்.
தென்றல்வாணனும் அவன் அருகே அமர்ந்தான்.
விக்னேஷ் நின்றுக் கொண்டே இருந்தான்.
“விக்னேஷ், இப்போ ரோகினி கேஸை நாங்க ஹாண்டில் செய்றோம். அதைப் பத்தி உன் கிட்ட பேசனும்,” என வந்த விஷயத்தை தொடங்கினான் தென்றல்வாணன்.
“சொல்லுங்க சார்,” என்றப் போதே விக்னேஷ்வரனின் முகத்தில் வேர்வைத்துளிகள் தென்பட்டது.
“உனக்கும் ரோஹினிக்கும் நடுவில் இருந்த ரிலேஷன் பத்தி சொல்லு.”
“எங்களுக்குள்ள உறவுன்னு எதுவுமே இல்லை, சார். அவ என்னோட படிச்ச பொண்ணு. ஒரு பிரென்ட், என்னை பொறுத்த வரைக்கும் அவ்வளவு தான். அவ தான் நிறைய தடவை போன் செய்து என் கிட்ட பேசி லவ் அது இதுன்னு தொல்லை செய்வா!” என தந்தி அடித்து சொல்லி முடித்தான்.