தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 35 - பிந்து வினோத்
மனோஜ் சுவற்றில் சாய்ந்த படி நின்றுக் கொண்டு... இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
மஞ்சு சமையலறையில் பாத்திரங்களை துலக்கி, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சின்ன சத்தம் கூட எழாமல் அவள் பாத்திரங்களை கழுவி எடுத்து வைப்பதை அமைதியாகப் பார்த்திருந்தான் மனோஜ்.
அவன் புது வேலை கிடைத்ததை அவளிடம் சொல்லி நான்கு மணி நேரங்கள் ஆகப் போகின்றது!
இதுவரைக்கும் அவள் வேலை பற்றி அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை!
ஏழு மணி ஆனதும் சாப்பிட அழைத்தாள், உணவை பரிமாறினாள்! அவ்வளவு தான்!
மஞ்சு கோபமாக இருப்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது! ஆனால், மஞ்சு போன்ற புத்திசாலி அவனின் நிலையை பற்றி யோசித்து, புரிந்துக் கொள்ளாமல் கோபப் படுவது அவனுக்கு சோர்வைக் கொடுத்தது.
“நீ எவ்வளவு கோபமா இருக்கேன்னு புரியுது pbs! ஆனால், என் நிலைமையும் உனக்கு தெரியும் தானே? என் பக்கம் இருந்து யோசிச்சுப் பாரேன்?” என்றான் அவளுக்கு விளக்கம் அளிப்பவன் போல!
மஞ்சு ஒரே ஒரு வினாடி அவன் திசையில் பார்த்தாள்.
அவள் விழிகளில் இருந்த சீற்றம் அவனை தீயாக சுட்டது!
“நீயும் என்னை புரிஞ்சுக்கலைனா எப்படி pbs?”
மஞ்சு கையிலிருந்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு அவனை நேராக பார்ப்பது போல திரும்பி நின்றாள்.