தேன், வினோதன் இருவருக்கும் தடபுடலான உபசரிப்பு நடந்தது.
“வீட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லோரையும் இப்படி தான் கவனிப்பீங்களா?” என்று விஜயாவிடம் விசாரித்தான் வினோதன்.
“ஆமாம் சார்! அம்மா இந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எந்த பாரபட்சமும் பார்க்காமல் எல்லோருக்கும் அன்போட உபசரிக்கனும் என்பது அவங்க கட்டளை”
“யாரா இருந்தாலுமா?”
“ஆமாம் சார், அன்னைக்கு குடை ரிப்பேர் செய்ற ஒருத்தர் வந்திருந்தார். அவருக்கு கூட இதே போல உபசரிப்பு தான்... அவர் அம்மா கால்ல விழுந்து கும்பிட்டுட்டு போனாருன்னா பார்த்துக்கோங்களேன்...”
“ம்ம்ம்ம்!!”
வினோதன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தேன் சுற்றி நோட்டம் விட்டான். ரோஹினி சம்மந்தப் பட்ட ஃபைல்களில் பார்த்திருந்த கிச்சனும் அதன் வெளிபக்கமும் ஓரளவிற்கு தெரிந்தன. ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் பெரிதும் மாறி போயிருந்தது.
தேன் தரையின் மீது பார்வையை பதித்தான்...
பளிங்கு போல் ஒரு சிறு தூசும் இல்லாமல் இருந்தது...
“வீடு ரொம்ப க்ளீனா இருக்கே... யாரு மெயின்டெயின் செய்றது?” என்று விஜயாவிடமே கேட்டான்.
“நாங்க மூணு பேரும் சேர்ந்து செய்வோம் சார். அம்மாக்கு சின்ன சின்ன தூசு குப்பை இருந்தா கூட பிடிக்காது. அதுக்காகவே பார்த்து பார்த்து கிளீன் செய்வோம்...”