விவேக் தான் அவர்கள் நண்பர்கள் செட்டின் தலைவன். படிப்பில் மட்டும் அல்லாது மற்ற எல்லா துறையிலும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. அவனை கண்டு பார்த்திபன் பல முறை ஆச்சர்யப் பட்டிருக்கிறான்.
விவேக்கை பற்றிய சிந்தனையில் பார்த்திபன் இருந்த போதே, குளிர்சாதனமயமாக்கப் பட்டிருந்த அந்த அறையின் கதவை திறந்து விவேக் உள்ளே வந்தான்.
"என்னடா விவேக் அதிசயம்? போன் செய்தால் கூட பிசி பிசின்னு பறப்ப??? என்ன விஷயம்... உட்காருடா... உட்கார்ந்து சொல்...."
நண்பனின் இருக்கைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த விவேக்,
"என்னடா பார்த்தி ரொம்ப பேசுற? இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்... சரி அப்படியே உன்னைப் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்...." என்றான் விவேக்.
"ம்ம்ம்ம்... நம்ப முடியலையே... உனக்கு என் ஞாபகம் சும்மா வராதே...???"
"டேய் போதும்டா... நிறுத்து...! சரி... அப்புறம்... போன வாரம் என்ன ஆச்சு? அங்கிள் ரொம்ப திட்டினாரா?"
"அதை விடுடா... அப்பா திட்ட தான் செய்தார். அம்மாக்கும் கொஞ்சம் வருத்தம் தான். ஆனாலும், எப்போதும் போல் எனக்கு சப்போர்ட் செஞ்சு அம்மா காப்பாத்திட்டாங்க..."
"சாரி டா..."
"அட இது என்ன புதுசா? சரி, உனக்கு இப்போ சந்தோஷம் தானே? அதை சொல்...."
விவேக் உடனே பதில் ஏதும் சொல்லாது அமைதியாக இருந்தான். பின்,
"இல்லைடா பார்த்தி... ஏதோ தப்பு செஞ்சுட்ட மாதிரி அந்த விஷயம் மனசை அரிச்சிட்டே இருக்கு..." என்றான்.