நீயே வந்து கிளாஸ் எடுத்துக்கோன்னு சொன்னால் என்ன அர்த்தம்?"
"சார் நான் அதை சொன்ன அர்த்தமே வேற..."
"என்ன வேற? எதுவா இருந்தாலும் நீங்க பொறுமையா தான் பேசி இருக்கனும்...."
"நீங்க சொல்றது சரி தான் மிஸ்டர் பார்த்திபன்... நான் பாரதி கிட்ட பேசினேன்... அவங்களும் தவறை உணர்ந்துட்டாங்க... இனிமேல் அப்படி பேசுறதில்லைன்னு சொன்னாங்க..." என்றார் சிதம்பரம் பாரதியை காப்பாற்ற விரும்புபவராக...
பார்த்திபன் சிதம்பரம் பக்கம் கோபமாக ஒரு பார்வைப் பார்த்தான்!
"நான் ஒன்னு சொல்லட்டுமா சிதம்பரம் சார்... நீங்க ரொம்ப lenientஆ இருக்கிறது தான் இதற்கு எல்லாம் காரணம்... நீங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டா அக்ஷன் எடுத்தால் இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வராது...."
"பார்த்திபா... போதும்... எனக்கு என்னவோ ஒரு சின்ன விஷயத்தை நீ ரொம்ப பெரிசு பண்ணி இப்படி மீட்டிங் எல்லாம் வச்சு பயமுறுத்துறேன்னு தோணுது.... அது தான் பாரதி இனிமேல் பொறுமையா பேசுறேன்னு சொல்லிட்டாங்கன்னு சிதம்பரம் சார் சொல்றாரே..." என்றார் அதுவரை அமைதியாக இருந்த விஸ்வநாதன்.
"இல்லை டாடி... பிரின்சிபால் இவங்களுக்காக சும்மா சொல்றார்... இவ்வளவு நேரம் பேசினாங்களே, நான் செஞ்சது தப்புன்னு சொன்னாங்களா என்ன?"
உமாவின் மனம் பாரதிக்காக வருந்தியது. விவேக்கின் மீது கோபமாக வந்தது... அவனிடம் ஏதாவது சொல்லி இந்த கலாட்டாவை நிறுத்தலாம் என்று பார்த்தால், அவன் கல் போல் முகத்தை வைத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பாபுவும், பத்மாவதியும், ஏதோ டிராமாவை பார்ப்பது போல் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீராவின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தது ஆனால் மீராவால் எதுவும் செய்ய இயலாது என்பதும் உமாவிற்கு புரிந்தது. என்ன செய்வது என உமா கையைப் பிசைந்தாள்...