இந்த உணர்வை எல்லாம் மீறி பாரதியின் மீதான வியப்பு மேலோங்கி இருந்தது. பார்த்திபன் இறுதியில் சொன்ன விஷயத்தைக் கேட்டு அவள் முகம் கன்றி சிவந்ததும், ஆனால் உடனேயே தன்னை சமாளித்துக் கொண்ட அவளின் மன உறுதியும் அவனை மிகவும் வியக்க வைத்தது. பாரதியை பற்றிய சிந்தனையில் இருந்தவன், உமாவிடம் எதுவும் சொல்ல வில்லை.
நண்பனை தேடி வந்த பார்த்திபன்,
"என்னடா இப்போ உனக்கு சந்தோஷமா?" என்றான்.
விவேக் ஒன்றும் சொல்லாது நின்றான்.
"சரிடா விவேக்... நான் கிளம்புறேன்... அப்பா வரதுக்குள்ளே நான் வீட்டுக்கு போறது தான் எனக்கு நல்லது.... வரேன் டா... வரேன் அண்ணி...." என்று சொல்லி விட்டு அவசரமாக கிளம்பினான் பார்த்திபன்.
சில நிமிடங்கள் கழித்து விஸ்வநாதனுடன் வந்த பாரதியின் முகத்தில் எந்த விதமான பெரிய மாற்றமும் இருக்க வில்லை. எப்போதும் போல் மலர்ச்சியுடனே இருந்தாள் பாரதி... உமாவும் விவேக்கும் அங்கே நிற்பதை கவனித்து நின்றவள், விவேக் பக்கம் பார்த்து,
"சாரி மிஸ்டர் விவேக்... நான் அன்னைக்கு உங்களை ரொம்ப ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேன்னு நினைக்கிறேன்... ஐ ஆம் ரியல்லி சாரி..." என்றாள், ஏதோ வேறு எதுவுமே நடக்காததுப் போல!
"நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க? உங்க மேல எந்த தப்பும் இல்லை..." என்றாள் உமா.
பாரதி வியப்புடன் பார்க்கவும்,
"நான் மதுவோட அண்ணி... என் பேர் உமா... " என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் உமா.