இதுவரை அவர்கள் நடுவே நேர்ந்த மற்ற சந்திப்புகள் போல் இல்லாது, இந்த முறை அவர்களுள் ஒரு சுமுகமான சுழல் உருவாகி இருந்தது. அவளிடம் தன் வாழ்வின் லட்சியத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தான் விவேக்.
“அப்போ ஏன் அதை இன்னும் தொடங்காமல் இருக்கீங்க?”
“வேற என்னங்க பாரதி... பணம் தான் காரணம்...”
“என்ன???”
பாரதியின் கேள்வியில் இருந்த ஆச்சர்யத்தைக் கேட்டு புன்னகைத்தான் விவேக்.
“ஆமாம் பாரதி! யோசிச்சுப் பாருங்க, எங்க வீட்டில் நாங்க மூணு பேர்... என்னைத் தவிர மற்ற ரெண்டுப் பேருக்கும் இதுப் போல புதுசா எதுவும் பரிசோதனை செய்ய விருப்பம் இல்லை... அப்போ நான் மட்டும் எப்படி அப்பா கிட்ட பணம் கேட்பது... இருந்தாலும் அம்மா, அப்பா, ஏன் அண்ணா, மது எல்லோருக்கும் கூட என் ஆசை தெரியும்.. அண்ணா எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னாலும், அம்மாக்கும் அப்பாக்கும், கொஞ்சம் தயக்கம் இருக்கு...”
“ஏன்???”
“பண விஷயம் ஆச்சே... இது கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்தக் கூடிய விஷயம்... “
விவேக்கின் பேச்சை பாதியில் நிறுத்துவதுப் போல்,
“சாரி பாரதி... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா?” என்ற பவித்ராவின் குரல் கேட்டது.
விவேக் சொல்வதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த பாரதியும், தோழியின் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.