தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 01 - சித்தார்த்
ஏஞ்சல் நடக்கும் நிகழ்வுகளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அலுவலக இந்திய தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்கு முந்தைய நாள் அவள் வீட்டிற்கு வாழ்த்த வந்திருந்தாள்.
அங்கே ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது. அதன் நடுவே மஞ்சளை குழைத்து மணமகளின் மேலே தடவினார்கள்.
“என்னப்பா எல்லோரும் இப்படி மஞ்சளா இருக்காங்க?” ஏஞ்சல் தன் அருகே இருந்த ஹீனாவிடம் ஆங்கிலத்தில் கேட்டாள்.
“இதுக்கு பேரு ஹல்தி செரிமோனி ஏஞ்சல். உனக்குத் தெரியாதா?” என ஹீனா ஏஞ்சலிடம் கேட்டாள்.
ஏஞ்சல் இல்லை என உதட்டைப் பிதுக்கினாள்.
“கல்யாண டைம்ல நடக்குற செரிமொனிஸ்ல இதுவும் ஒன்னு. ஹல்தினா மஞ்சள்! இப்படி மஞ்சள் தேய்க்குறதுக்கு பின்னால வேற நிறைய காரணம் இருக்கு. அதெல்லாம் உனக்கு அப்புறம் சொல்றேன்.”
தன் பக்கத்தில் இருந்த விபுலை பார்த்தாள் ஏஞ்சல். அவன் தனக்கு விபரம் தெரியாது என்பதாக தோள்களை ஷ்ரக் செய்தான்.
“ஏன் ஹீனா அப்புறம் சொல்றேன்னு சொல்ற? இப்போ சொன்னா என்ன?” ஏஞ்சல் ஹீனாவிடமே கேட்டு விட்டாள்.
“காரணம் இருக்கு ஏஞ்சல். உனக்காக ஷார்ட்டா சொல்றேன். கல்யாணப் பொண்ணோ, பையனோ ஹல்தி செரிமோனி அப்போ மஞ்சள் தேய்ச்சுட்டு, தன் கையில இருக்க மஞ்சளை கல்யாணம் ஆகாத யாரு மேல தேய்க்குறாங்களோ அவங்களுக்கு அடுத்ததா உடனே மனசுக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம் நடக்கும்னு நம்பிக்கை! நானும் ஒவ்வொரு கல்யாணத்திலேயும் காத்துட்டே இருக்கேன். இந்த தடவையாவது எனக்கு லக் அடிக்கும்னு நம்புறேன்.”