"பாரு, ஹிஸ்டரி பத்தியே யோசிச்சு எதுவும் ஆகப் போறதில்லை... விவேக் ரொம்ப நல்லவர்...."
"அவர் நல்லவராகவே இருக்கட்டும் பவி... எனக்கு இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்... எனக்கு இதெல்லாம் பிடிக்கலை... சுத்தமா பிடிக்கலை..." என்றாள் பாரதி பிடிவாதத்துடன்!
இந்தப் பேச்சை தொடர்ந்தால் பாரதியின் மனம் இன்னமும் இதே ரீதியில் தான் சிந்திக்கும் என்பதை உணர்ந்து அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அமைதியாக இருந்தாள் பவித்ரா.
************
வெகு நேரம் சென்றப் பிறகும் பாரதி உடனான உரையாடல் பவித்ராவின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது...
வீட்டில் வேலை செய்யும் போது அதைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டே தான் இருந்தாள்...
இரவு உணவு வேளையின் போதே மனைவியின் முகத்தில் இருந்த யோசனையை ரமேஷ் கவனித்தான்... ஆனால் அப்போது என்ன எது என்று எதுவும் அவன் கேட்கவில்லை.
வேலை எல்லாம் முடித்து, தூங்கிப் போன நித்திலாவை கமலாவிடம் இருந்து வாங்கி, மெல்ல தூக்கி வந்து அவர்கள் அறையில், கட்டிலில் படுக்க வைத்தாள் பவித்ரா.
அவள் வருவதற்காகவே காத்திருந்த ரமேஷ்,
"என்ன விஷயம் பவி டார்லிங்... இன்னைக்கு ஒரே சிந்தனையில் ஆழ்ந்திருக்கீங்க...???" என்று விசாரித்தான்.
யாரிடமாவது பாரதி பற்றிய மொத்த விஷயத்தை கொட்டித் தீர்த்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்த பவித்ராவிற்கு ரமேஷ் அந்தக் கேள்வியை கேட்டது நிம்மதியைக் கொடுத்தது! அவனை தவிர வேறு யாரை நம்பி அவள் அனைத்தையும் சொல்ல முடியும்..!!!