அவனை பற்றி பேசவாவது செய்யலாம் என்றால், பவித்ரா இப்போதெல்லாம் விவேக் பற்றி பேசுவதே இல்லை. அவளாகவே அவனை பற்றி தோழியிடம் பேசவும் தயக்கமாக இருந்தது.
கல்லூரி இரண்டு வாரங்கள் விடுமுறை என்பதால், அனைவரும் மகாபலிபுரம் செல்லலாம் என ரமேஷ் திட்டமிட்டிருந்தான். தனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என பாரதியும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாள். மறுநாள் காலை பவித்ராவின் குடும்பம் அவளின் விடுதிக்கு வந்து அவளை அழைத்துக் கொண்டு அப்படியே மகாபலிபுரம் செல்வதாக திட்டம். அதற்காக பவித்ரா சொல்லி இருந்த சில நொறுக்கு தீனிகளை வாங்க அந்த இடத்தில் பிரசித்தி பெற்ற பல் பொருள் அங்காடிக்கு வந்திருந்தாள் பாரதி.
பவித்ரா சொல்லி இருந்த பிஸ்கட், சிப்ஸ் வகைகளை தேடி எடுத்தவள், பவித்ரா சொல்லாத ஆனால் தோழிக்கு பிடித்த பொருட்களையும் வாங்கினாள். ஒரு புன்னகையோடு அடுத்த பகுதிக்கு செல்ல வந்தவள், கவன குறைவாக அங்கே வேறு யாரோ வைத்திருந்த பொருட்கள் அடங்கிய கூடையில் இடித்துக் கொண்டாள்.
"அடடா அடிப் பட்டிருச்சா? சாரிங்க..." என்றக் குரலில் திகைத்து நிமிர்ந்தாள். ஏனெனில் அங்கே அவள் முன் நின்றிருந்தவன் விவேக்!
"இல்லை... என் மேல தான் தப்பு.... நான் கவனிக்கலை..."
பாரதி அங்கே விவேக்கை பாரதி எதிர்பார்க்கவே இல்லை! ஆனாலும் அவனை அங்கே சந்தித்ததில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் விவேக்கின் முகத்தை பார்த்தவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவன் முகத்தில் கடந்த சில சந்திப்புகளில் இருக்கும் அந்த சினேக பாவனையோ, பரிச்சைய புன்னகையோ இல்லை.
ஏற்கனவே இருந்த குற்ற உணர்வோடு, அவனின் அந்நிய பார்வையும் சேர, அவசரமாக,
"சாரி, நீங்க ஹாஸ்டல் வந்த போது, உங்களை மீட் செய்ய முடியலை..." என்றாள்.
அவள் முக மாற்றங்களை கொண்டே, அவளின் மனநிலையை ஊகித்த விவேக்கின் மனதில்