தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 06 - சித்தார்த்
"இந்த அளவுக்கு அட்ஜஸ்ட் செய்றவங்களை இப்போ பார்க்குறது கஷ்டம். நானே கூட உங்க கிட்ட கேட்க யோசிச்சிருப்பேன், நீங்களா இந்த ஐடியா சஜஸ்ட் செய்ததை நம்பவே முடியலை." என ப்ரீத்தி ஏஞ்சலிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஏஞ்சல் அலட்டாமல் புன்னகை புரிந்துக் கொண்டு நின்றாள்.
அதுல் தன் குடும்பத்தினரின் பொருட்களை காட்டேஜில் ஏஞ்சல் அவர்களுக்காக கொடுத்திருந்த அறையில் வைத்துக் கொண்டிருந்தான். ஷில்பா அவனோடு முன்னும் பின்னும் துள்ளலுடன் ஓடிக் கொண்டிருந்தாள்.
"நான் போய் திங்க்ஸ் அடுக்குறேன். உங்களுக்கு எங்களால வசதிக் குறைவு இல்லையே? தயங்காம என் கிட்ட சொல்லுங்க. நான் ஷில்பாவை சமாதானப் படுத்திருவேன்." ப்ரீத்தி முன்பே ஏஞ்சலிடம் கேட்டிருந்த கேள்வியை மறுபடியும் கேட்டாள்.
"எனக்கு எந்த ப்ராப்ளமும் கிடையாதுங்க. நான் நிறைய நேரம் வெளில தான் இருப்பேன். எனக்கு இவ்வளவு பெரிய காட்டேஜ் அவசியமே கிடையாது. என் கம்பெனி,"
ஏஞ்சல் மேலே பேசியது கேட்காத அளவிற்கு ஷில்பா தன்னுடைய பேவரைட் டெட்டி பேரை கட்டிப் பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள்.
"ஷில்பா, சத்தம் போடாதே!"
"ஷில்பா, ஆன்ட்டியை தொல்லை செய்யாதே!"
ஷர்மிளா, ப்ரீத்தி இருவரும் ஒரே நேரத்தில் ஷில்பாவை கண்டித்தார்கள்.
ஓடிக் கொண்டிருந்த சிறுமி நின்று ஏஞ்சலை விழிகளை சுருக்கிப் பார்த்தாள்.
ஏஞ்சலுக்கு சிரிப்பு வந்தது. அவளும் பதிலுக்கு ஷில்பாவை அதே போல கண்களை சுருக்கிப் பார்த்தாள்.