கிளம்புவோம்..." என்றாள் கற்பகம்.
ஒரு மஹாராணியின் தோரணையுடன் கற்பகம் சொல்லவும், மறுத்து பேச யாருக்கும் தோன்றவில்லை. பாரதிக்கு விவேக் இருக்கும் இடத்தை விட்டு தூரமாக சென்றால் போதும் என்று தோன்றியது. இது போல் ஓடி ஒளிவதால்
என்ன பயன் என்றும் அவளுக்கு புரியவில்லை. அவனை பார்க்காதிருந்த அந்த சில நாட்கள் அவனை சந்தித்த நாட்களை விட அவனின் நினைவு அதிகமாக வர கூடியதாகவே இருந்தது. இப்போது மற்றவர்கள் அமைதியாக இருக்கும் போது கற்பகத்தை எதிர்த்து பேச மனம் வராததால், அமைதியாக இருந்தாள் பாரதி.
உண்மையில் கற்பகம் அன்றிரவு தங்கி செல்வதை விரும்பியதற்கு காரணமே பாரதியுடன் பேச வேண்டி இருந்ததால் தான். அவள் விரும்பியதை போலவே அன்றே பாரதியுடன் பேசும் வாய்ப்பும் அவளுக்கு கிடைத்தது!
அதற்கு பின் எல்லாம் துரிதமாக நடந்தது, மூன்று காட்டேஜ்களை ஒரு நாளுக்கு வாடகை எடுத்து விட்டு, அங்கேயே உணவையும் முடித்தனர். முன் இரவு நேரம் என்பதால் கடைகள் திறந்திருக்கவே அருகில் இருந்த கடையில் வேண்டிய உடைகளையும் வாங்கி கொண்டனர்! பணம் செய்யும் மாயாஜாலங்களை மனதில் வியந்த படி, அவளும் மதுவும் தங்க போகும் அறையின் அருகில் இருந்த தோட்டத்தில் உலாவி கொண்டிருந்தாள் பாரதி. கமலாவும் கற்பகமும் அதே காட்டேஜில் அருகில் இருந்த அறையிலும், விவேக் மாடியில் இருந்த அறையிலும் தங்குவதாக இருந்தது. மதுவிற்கு தன் மேல் இருக்கும் அன்பை எண்ணி வியந்தாள் பாரதி!
அன்று முழுவதும் விவேக்கின் அருகிலேயே இருந்தது அவளுடைய மனதில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. வழக்கம் போல் மூளை விடுத்த எச்சரிக்கைகளை மனம் அசட்டை செய்தது! அவளின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் அருகில் காலடி ஓசை கேட்டது. ஒருவேளை விவேக் தான் வருகிறானோ என்ற ஆர்வத்துடன் சற்றே எதிர்பார்ப்புடன் திரும்பி பார்த்தவள், கற்பகமும், உமாவும் வருவதை கண்டு மனதில் ஏமாற்றமடைந்தாள். ஆனால் வந்தவர்களை பார்த்து விட்டு, மனதில் தோன்றிய ஏமாற்றத்தை வெளியில் காட்டாது புன்னகைத்தாள்.