பதிலுக்கு சிரித்த போதும், உமாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் மலர்ச்சி இல்லை. ஏன் என்று அவள் யோசிக்கும் முன்பே, கற்பகம் பேசினாள்.
"பாரதி, நீ தானா? நானும் மதுவோன்னு நினைச்சேன்... மது எங்கே?"
"அவள் ரூமில் இருக்கா மேடம், பாட்டு கேட்டுட்டு இருக்கா... நான் சும்மா கொஞ்ச நேரம் நடக்கலாம்னு வந்தேன்..."
"சரி சரி... அங்கேயே இருக்கட்டும்.... அவள் இருக்கும் போது என்னால் எதுவும் பேச முடியாது... இது கொஞ்சம் ரகசியமான விஷயம்..."
"ஓ! சரி நீங்க பேசுங்க, நானும் உள்ளே போறேன்..."
"பரவாயில்லை பாரதி, இப்படி உட்கார், உன்னிடம் சொல்லனும் போல இருக்கு..." என்றாள் கற்பகம் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்த படி. உமாவும் அமரவும், பாரதி அமைதியாக அங்கே இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.
"என்ன சொல்ல பாரதி, எங்க குடும்பத்தில் கொஞ்ச நாளாகவே பிரச்சனை..."
இதை ஏன் தன்னிடம் சொல்கிறாள் என்று புரியாமல் பாரதி உமாவை பார்த்தாள். உமா கற்பகத்தின் பேச்சை கவனிக்குமாறு கண்களால் சைகை செய்யவும், பெரியவளின் பேச்சை கவனித்தாள் பாரதி.
"பெரியவன் சாது...இந்த சின்னவன் இருக்கானே சரியான அடாவடி..."
அதுவரை அமைதியாக இருந்த பாரதி, இப்போது குறுக்கிட்டு,
"ஏன் மேடம் அப்படி சொல்றீங்க? விவேக் சாரை பார்த்தால் அப்படி எல்லாம் தெரியலையே" என்றாள்.