பாரதி அதிர்ச்சியில் சிலை போல் அமர்ந்திருந்தாள். பின் திடிரென உணர்வு பெற்றவளாய்,
"ஏன் மேடம், இது அவருக்கு தெரியுமா?" எனக் கேட்டாள்.
அவளை கவனித்தபடியே,
"இல்லைம்மா, இதுவரை தெரியாது.... ஆனால் அவன் இனி இந்த புது பிஸ்னஸ் விஷயமா பேசினால் உண்மையை சொல்லி விட வேண்டியது தான்..." என்றாள் கற்பகம்.
பாரதியின் மனதில் பல எண்ண அலைகள் வீசியது. விவேக்கிற்கு இந்த விஷயம் தெரியும் போது எப்படி இருக்கும் என்பது அவளுக்கு புரிந்தது. முதல் நாள் அவனை சந்தித்த போது, மதுவிற்காக, அவளுடன் கோபமாக பேசியவன் நினைவில் வந்தான். மதுவை பற்றி அவன் பேசியதும் நினைவில் வந்தது... பிஸ்னஸ் பற்றி பேசியவன், அதனால் குடும்பத்தில் வர கூடிய பிரச்சனைகளை சொன்னதும் நினைவில் வந்து, எந்த அளவிற்கு அவன், அவன் குடும்பத்தினர் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது... அந்த குடும்பமே நிஜமில்லை என்றானால், அவனால் தாங்க முடியுமா?
பாரதி விவேக்கை எண்ணி மனதில் வருந்திக் கொண்டிருந்த பொது, அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்த கற்பகத்தின் முகத்தில் சற்றே ஏளன புன்னகை தோன்றியது. இவளும் ஒன்றும் 'தங்கம்' இல்லை என்பது போல், உமாவின் பக்கம் ஒரு பார்வையை வீசினாள். உமாவிற்கு பாரதியின் சிந்தனைக்கான காரணம் புரியவில்லை. அவளின் அமைதி உமாவையும் குழப்பியது. ஒரு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது.
"சரி பாரதி, மதுவிற்கு இதெல்லாம் தெரியாது, அவள் வரும் முன்..."
கற்பகம் முடிக்கும் முன், குறுக்கிட்டு,
"ஏன் மேடம் அவருடைய பிஸ்னஸ் ஆரம்பிக்க எவ்வளவு பணம் தேவைப்படும்?" எனக் கேட்டாள் பாரதி.