"ஒவ்வொருவரையும் ஞாபகம் வைக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை பாரதி, இப்போதைக்கு சும்மா ஸ்மைல் செய்தால் போதும்... மற்றபடி வேண்டியவர்களை அடுத்து பார்க்கும் போது, நான் மீண்டும் இன்ட்ரோ செய்து வைக்கிறேன்..." என்றான்.
சரி என தலை அசைத்தவளால் அதனால் தானோ என்னவோ, வரவேற்பில் வெகு இயல்பாக இருக்க முடிந்தது.
இரவு உணவு முடித்த பின், அன்று இரவே சாந்தி முகூர்த்தம் என்று ஏற்பாடு செய்திருந்தபடியால், பவித்ராவும், உமாவும், பாரதியை கிண்டல் செய்தபடி அலங்காரம் செய்துக் கொண்டிருந்தனர்.
"நாம வேஸ்டா டைம் ஸ்பென்ட் செய்றோம், பவித்ரா... விவேக் இந்த அலங்காரத்தை எல்லாம் கவனிக்க கூட போவதில்லை..."
"என்ன உமா இப்படி சொல்லிட்டீங்க? இன்னைக்கு காலையில் மணமேடையில இருந்து எல்லோரும் இருப்பதை கூட மறந்து என்ன ஒரு பார்வை பார்த்தார்..."
"அது காலையில், இப்போ அப்படி பார்க்க வேண்டாமே, இந்த அலங்காரம் எல்லாம் ஒருவிதத்தில் தொல்லை தானே, என்ன பாரதி?"
மற்ற இருவரும் சிரிக்க, பாரதி அமைதியாக இருந்தாள். மேலும் கிண்டலும் கேலியுமாக இருவரும் ஒரு வழியாக அலங்காரம் செய்து முடித்தனர்.
"வாவ்! ரொம்ப அழகா இருக்க, பாரதி..." என்றாள் உமா.
அமைதியாக இருந்த பாரதியின் முகத்தை பார்த்த பவித்ரா,
"அழகா இருக்கா சரி... ஆனால், ஃபர்ஸ்ட் நைட்டுக்கான பரபரப்பையே முகத்தில் காணும், என்ன விஷயம் பாரதி?" என்றாள்.