"சஞ்சீவ், நீ மத்தியானம் முடிந்தால் சீக்கிரம் வா... மாமாவை போய் ஸ்டேஷன்ல விட்டுட்டு வரலாம்..." என்றாள்.
"சரி ம்மா கட்டாயம் வரேன்..." என்று சொல்லி, தலை அசைத்து விடை பெற்று சென்றவனை ஆச்சர்யமாக பார்த்தார் காஞ்சனா.
பொதுவாக சஞ்சீவ் இது போன்ற சமயங்களில் சஞ்சீவ் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான்...
ம்ம்ம்ம் சிறிது நாளாகவே இவன் மாறி தான் போய் இருக்கிறான்!
🌼🌸❀✿🌷
கீதாவிடமும் சொல்லி விட்டு கிளம்பிய சஞ்சீவ், வீட்டின் முன் இருந்த ரோஜா செடிகளின் அருகில் கண்மணி நிற்பதைக் கண்டான். தன்னுடைய பைக்கில் ஏறி கிளப்பியவன், ஏதோ தோன்றியவனாய், கண்மணி அருகில் பைக்கை நிறுத்தினான்.
"கண்மணி, மாமாவும் அம்மாவும் உன்கிட்ட என்ன சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியலை... இருந்தாலும் இதை உன் கிட்ட இப்போவே சொல்றது நல்லதுன்னு தோணுது... எனக்கு நீயும் ஒரு தங்கச்சி மாதிரி தான்.... நான் என்னைக்கும் உன்னை வேற மாதிரி நினைச்சது இல்லை... ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... நான் விளக்கமா அப்புறம் பேசுறேன்... சாரி...."
சஞ்சீவ் படபட என் சொன்னதைக் கேட்டு, திகைத்து நின்றாலும், சரி என்பது போல் கண்மணி தலை அசைக்கவும், பைக்கை உயிர்ப்பித்துக் கிளப்பினான் சஞ்சீவ்.
கண்மணியிடம் அப்படி தலை - வால் புரியாது பேசியது அவனின் மனதுள் சிறு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திய போதும், கண்மணியிடம் தன் மனதை தெளிவு படுத்தி விட்டதில் நிம்மதியாகவும் இருந்தது.