தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
16. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மூன்று தோழிகளும் நேரில் சந்தித்து சில நாட்கள் ஆகி இருந்தன. ரோஷினிக்கு உடல் நலம் சரியில்லை என வீணாவும், அலுவலகத்தில் புதிதாக பெற்றிருந்த டீலினால் இந்துவும், மும்முரமாக இருந்ததால் வழக்கமாக நடக்கும் அவர்களின் வார ஒரு முறை சந்திப்பு தள்ளி போய் கொண்டிருந்தது.
ரோஷினி உடல்நலம் தேறி, மீண்டும் முன்பு போல் விளையாட தொடங்கி விட்டதால், வரும் வெள்ளிக் கிழமை சந்திப்பதென மூவரும் முடிவு செய்து வைத்திருந்தனர். கீதா - ராஜீவின் இரண்டாம் திருமண நாள் ஒரு வாரத்தில் வர இருந்ததால், கீதாவுக்கு 'சர்ப்ரைஸ்" ஆக சேலைகள் வாங்கிக் கொடுக்க இந்து விரும்பினாள். எனவே, வழக்கம் போல் வீணாவிடம் பேசி, வியாழன் காலை கடைக்கு செல்வது என அவர்கள் இருவரும் முடிவு செய்திருந்தனர்.
🌼🌸❀✿🌷
வியாழன் காலை, கடந்த சில நாட்களாக பழக்கமாகி இருந்த மொபைல் ஃபோனின் சிணுங்கலில் கண் விழித்த இந்து, சஞ்சீவ் அனுப்பி இருந்த காலை வாழ்த்து செய்தியை படித்து, சிரித்து விட்டு, அவனுக்கு பதில் அனுப்பினாள். உடனடியாக அவனிடம் இருந்து பதில் வரும் என்பது அவள் அறிந்ததே. ஆனால், அன்று அவளுக்குப் பல வேலைகள் இருந்தன. மறுநாள் நடக்க இருந்த மாதாந்திர போர்டு மீட்டிங்கிற்கு வேண்டிய செய்திகளை சேகரித்து குறித்து வைக்க வேண்டும். புதிதாக பெற்றிருந்த டீல் குறித்து மீட்டிங்கில் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய தகவல்களை குறித்து வைக்க வேண்டும். கம்பெனியின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேச வேண்டும்...
இந்து தன் யோசனையில் ஆழ்ந்திருக்க, அவளின் எண்ண ஓட்டத்தை தடை செய்வதுப் போல் கைப் பேசி மீண்டும் சிணுங்கியது. அவள் எதிர்பார்த்ததுப் போல் அது சஞ்சீவின் குறுஞ் செய்தி தான். அவளின் காலை வாழ்த்துக்களால் அவனின் அன்றைய நாள் இனிதாக தொடங்கி இருப்பதாக அனுப்பி இருந்தான். அதைப் படித்து, புன்னகைத்துவிட்டு, பதில் ஏதும் அனுப்பாது, ஜவுளிக் கடைக்கு செல்ல தயாராகத் தொடங்கினாள் இந்து.
🌼🌸❀✿🌷