ஸ்டார் போலீஸ் என்று பொதுமக்களால் அன்புடன் அழைக்கப்படும் சக்தி 2010ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறையில் இணைந்தார்.
பல பிரசித்தி பெற்ற ரவுடிகளை சிறைக்கு அனுப்பிய பெருமை பெற்ற சக்தியின் மீது சமீப காலமாக பல விதமான துறை சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன் அரசியல் தலைவர் ஒருவரின் கைதுக்கு சக்தி காரணமாக இருந்ததால் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக வதந்திகள் இருந்த நிலையில் சக்தியின் இந்த திடீர் முடிவு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.”
ரொம்ப சத்தமாக ஒலித்த செய்தி சமைத்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு எரிச்சலைக் கொடுத்தது.
“எதுக்கு இப்படி டி வியை அலற விட்ருக்கீங்க??? வால்யூமை கம்மி பண்ணுங்க” என்று கத்தியபடி டிவி இருந்த அறைக்கு வந்தவள் கணவன் தென்றல்வாணனின் முகத்தைப் பார்த்து அமைதியானாள்.
“யாருக்கு என்னாச்சு?” கேள்வி கேட்டபடி கணவன் பார்த்துக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தாள்.
சென்னை காவல் துறை கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த சக்தியை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.
அவர்களை விலக்கி விட்டு, யாருக்கும் பதில் சொல்லாமல் காரில் ஏறி கிளப்பிச் சென்றாள் சக்தி.
“யாருங்க இவங்க? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?”
“தெரியும். ஒன்னா வொர்க் செய்திருக்கோம்.”